வீட்டுக்கப் பின் 13 அடி இடம் ஆக்கிரமிப்பா? கருணாநிதி பதில்
வீட்டுக்கப் பின் 13 அடி இடம் ஆக்கிரமிப்பா? கருணாநிதி பதில்
வீட்டுக்கப் பின் 13 அடி இடம் ஆக்கிரமிப்பா? கருணாநிதி பதில்

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:தி.மு.க., அறக்கட்டளைக்கு அலுவலகம், திருமண மண்டபம், அனாதை இல்லம் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அனுமதியில், 1,890 சதுர மீட்டர் நிலத்தை, திறந்தவெளி நிலமாக பொது மக்கள் பொழுதுபோக்கு பூங்காவாக தி.மு.க., அறக்கட்டளையே பராமரிக்க வேண்டும் என கூறப்பட்டது.இதன்படி, மாநகராட்சிக்கு ஒதுக்கிய திறந்தவெளி இடத்துக்குப் பதிலாக, அறிவாலயத்துக்கு முகப்பில் இடம் ஒதுக்க அறக்கட்டளை முன்வந்தது. இதற்கு அரசு அனுமதியும் கொடுத்தது. அ.தி.மு.க., ஆட்சியின்போது, திறந்த வெளியிடமாக ஏற்கனவே ஒதுக்கிய இடத்தை தான் தர வேண்டும் என தி.மு.க., அறக்கட்டளையை கேட்டனர்.
இதுதொடர்பாக, வழக்கு தொடரப்பட்டு, அறக்கட்டளை விருப்பத்தை பரிசீலித்து நடவடிக்க எடுக்கலாம் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பின், மாநகராட்சியும், மாநகர வளர்ச்சிக் குழுமமும், நடவடிக்கை தேவையில்லை என்றும், பிரச்னையை கைவிடுவதென்றும் முடித்துவிட்ட நிலையில், இப்போது பூதாகரமாக கிளப்புகின்றனர்.இதேபோல், என் வீட்டுக்குப் பின்புறம் உள்ள, 13 அடி சந்தை ஆக்கிரமித்ததாக கூறுகின்றனர். அந்த பகுதி கால்வாய் இடம். அதை, 1967ல், மாநகராட்சி ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும், சுத்தம் செய்யப் பயன்படுத்துவர் என்ற நிபந்தனையில், 3,250 ரூபாய்க்கு விலைக்கு பெறப்பட்டது. அந்த இடம் இப்போது, என் வீட்டு காவல் பணியில் உள்ளோர் ஓய்வெடுக்க பயன்படுத்துகின்றனர்.
இதை, சபாநாயகர் தலைமையிலான குழு எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம். என் மீது கூறப்பட்ட நிலப் பிரச்னைக்கு விளக்கம் அளித்துள்ளேன்.சிறுதாவூர் மற்றும் கொடநாடு பிரச்னை பற்றி சட்டசபையில் பதில் சொல்வார்களா? சொத்துக் குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளிப்பாரா?இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.