கிராமத்துக்குள் புகுந்த யானை கூட்டம்
கிராமத்துக்குள் புகுந்த யானை கூட்டம்
கிராமத்துக்குள் புகுந்த யானை கூட்டம்
ADDED : ஆக 12, 2011 02:09 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, நள்ளிரவில் கிராமத்துக்குள் புகுந்த யானை
கூட்டம், நான்கு குடிசை வீடுகளை சேதப்படுத்தியதோடு, வாழை, கரும்பு உள்ளிட்ட
பயிர்களையும் நாசம் செய்தன.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த
ஜவ்வாது மலையடிவாரத்தில் உள்ள கோவிந்தாபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட,
கெடக்கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குமார், 26.
நேற்று முன்தினம்
இரவு, போர்டிகோவில் தூங்கி கொண்டிருந்த இவர், நாய்கள் குரைக்கும் சத்தம்
கேட்டு விழித்து பார்த்தார். வீட்டுக்கு முன் ஒன்பது யானைகள், கூட்டமாக
நின்றிருந்ததை கண்டு, அதிர்ச்சியடைந்த அவர், கூச்சல் போட்டார். அக்கம்
பக்கத்தினர் சேர்ந்து, யானைகளை விரட்ட முயற்சித்த போது, நான்கு குடிசை
வீடுகள் மற்றும் வாழை, கரும்பு, பப்பாளி தோட்டத்தில் புகுந்து, பயிர்களை
மிதித்து நாசம் செய்தன. வனத்துறையினர், விடிய, விடிய தீப்பந்தங்களை
ஏந்தியும், பட்டாசு வெடித்தும் யானைகளை விரட்டினர். நேற்று காலை,
கெடக்கானூர் அடுத்த அங்குத்தி மலை பகுதிக்கு, யானைகள் கூட்டம் இடம்
பெயர்ந்தது.


