"பொட்டு' சுரேஷ், "அட்டாக்' பாண்டி,எஸ்ஸார் கோபி, வி.கே.குருசாமி ஆஜர்
"பொட்டு' சுரேஷ், "அட்டாக்' பாண்டி,எஸ்ஸார் கோபி, வி.கே.குருசாமி ஆஜர்
"பொட்டு' சுரேஷ், "அட்டாக்' பாண்டி,எஸ்ஸார் கோபி, வி.கே.குருசாமி ஆஜர்
ADDED : ஆக 03, 2011 01:34 AM
மதுரை : மதுரை தி.மு.க.,வினர் மீதான வழக்குகளில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், 'பொட்டு' சுரேஷ், எஸ்ஸார் கோபி, மாநகராட்சி மண்டல தலைவர் வி.கே.குருசாமி, வேளாண் விற்பனைக்குழு முன்னாள் தலைவர் 'அட்டாக்' பாண்டி ஆகியோர், கோர்ட்டில் ஆஜராயினர்.
* மதுரை அண்ணா நகர் ஆடிட்டர் அமர்நாத் கொடுத்த நில அபகரிப்பு வழக்கில், 'பொட்டு' சுரேஷ் பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை, போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனு, மதுரை முதலாவது ஜெ.எம்.கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.
சுரேஷ் ஆஜர்படுத்தப்பட்டார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள் மோகன்குமார், குபேந்திரன் ஆஜராயினர். இவ்வழக்கின் தீர்ப்பை, இன்று தள்ளி வைத்து, மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் உத்தரவிட்டார்.
* திருமங்கலம் சிவனாண்டி - பாப்பா கொடுத்த நில அபகரிப்பு வழக்கில், எஸ்ஸார் கோபி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவனியாபுரம் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கில், மதுரை ஆறாவது ஜெ.எம்.கோர்ட்டில் கோபியை போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை, ஆக., 16 வரை ரிமாண்ட் செய்து, மாஜிஸ்திரேட் சுஜாதா உத்தரவிட்டார்.
கோபியை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, கோபி சார்பில், வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ண லட்சுமணராஜ், மணிகண்டன், தனபால் கால அவகாசம் கோரினர். விசாரணையை, ஆக., 4க்கு தள்ளி வைத்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
* காமராஜர்புரம் செல்வராஜ் புகார்படி, வீடு, இடம் அபகரிப்பு வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், குருசாமி, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேர்தல் முன்விரோதம் காரணமாக, கீரைத்துறையைச் சேர்ந்த அ.தி.மு.க., 54வது வார்டு பிரதிநிதி மயில்முருகன் புகார்படி, வி.கே.குருசாமி மீது, தெப்பக்குளம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் குருசாமியை, போலீசார் மதுரை முதலாவது ஜெ.எம்.கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை, ஆக., 16ம் தேதி வரை ரிமாண்ட் செய்து, மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் உத்தரவிட்டார்.
* தேர்தல் முன்விரோதம் காரணமாக தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சாகா ஸ்டாலின் புகார்படி, குருசாமி மீது கீரைத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் குருசாமியை போலீசார், ஆறாவது ஜெ.எம்.கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை, ஆக., 16ம் தேதி வரை ரிமாண்ட் செய்து, மாஜிஸ்திரேட் சுஜாதா (பொறுப்பு) உத்தரவிட்டார்.
* கோவையைச் சேர்ந்த ஜெகதீசன் கொடுத்த நில அபகரிப்பு புகார்படி, 'அட்டாக்' பாண்டி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை, போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, மத்திய குற்றப்பிரிவு போலீசார், மதுரை முதலாவது ஜெ.எம்., கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். பாண்டியை போலீசார் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கின் தீர்ப்பை இன்று தள்ளி வைத்து, மாஜிஸ்திரேட் முத்துக்குமரன் உத்தரவிட்டார்.
கரை வேட்டியை தவிர்த்த தி.மு.க.,வினர்
'பொட்டு' சுரேஷ், 'அட்டாக்' பாண்டி, எஸ்ஸார் கோபி, வி.கே.குருசாமி ஆகியோரை மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். அவர்களைப் பார்க்க தி.மு.க.,வினர் பலர் கோர்ட்டுக்கு வந்தனர்.
அவர்களில் பெரும்பாலானோர், கட்சி கரை வேட்டியைத் தவிர்த்திருந்தனர். ''தினமும் ஒரு பொய் வழக்கு போடுறீங்க...'' என, இன்ஸ்பெக்டர் திருமால் அழகைப் பார்த்து, இறுகிய முகத்துடன் குருசாமி கேட்டார். பதிலளிக்க விரும்பாத இன்ஸ்பெக்டர், முதலாவது ஜெ.எம்.கோர்ட்டுக்குள் சென்றார். யார் யார், எந்தெந்த வழக்குகளில் ஆஜராகின்றனர் என்பதை அறியவும், வழக்குகளின் நிலை குறித்து அறியவும், உளவுப்பிரிவு போலீசார், அங்கும் இங்கும் பரபரப்பாக இயங்கினர்.


