கொப்பரையை உலர வைப்பதற்கு சோலார் உலர்களம் :பொள்ளாச்சி கூட்டுறவு சங்கத்தில் அறிமுகம்
கொப்பரையை உலர வைப்பதற்கு சோலார் உலர்களம் :பொள்ளாச்சி கூட்டுறவு சங்கத்தில் அறிமுகம்
கொப்பரையை உலர வைப்பதற்கு சோலார் உலர்களம் :பொள்ளாச்சி கூட்டுறவு சங்கத்தில் அறிமுகம்
ADDED : ஆக 29, 2011 11:12 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கூட்டுறவு மார்க்கெட்டிங் சொசைட்டி சார்பில் தென்னை விவசாயிகளுக்காக சோலார் உலர்களம் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் முன்னோடியாக அமைக்கப்பட்டுள்ள சோலார் உலர்களம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது. பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், கிணத்துக்கடவு, உடுமலை சுற்றுப்பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கொப்பரை உலர்களங்கள் உள்ளன. ஆனால், மழைகாலத்தில் கொப்பரை உற்பத்திக்கு விடுப்பு கொடுப்பதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழக்கின்றனர்.
எனவே, ஆண்டு முழுவதும் கொப்பரை உற்பத்தி செய்யும் சோலார் உலர்களத்தை பொள்ளாச்சி கூட்டுறவு மார்க்கெட்டிங் சொசைட்டி (பிசிஎம்எஸ்) நிர்வாகம் அமைத்துள்ளது. லேசான வெயில் இருந்தாலே கொப்பரை உற்பத்தி செய்வதற்கு தேவையான வெப்பம் கிடைப்பதால், மழை காலத்திலும் தடையின்றி கொப்பரை தயாரிக்கப்படுகிறது. பொள்ளாச்சி கூட்டுறவு மார்க்கெட்டிங் சொசைட்டி தனி அலுவலர் ராதாகிருஷ்ணன், விற்பனை அபிவிருத்தியாளர் தங்கவேல் கூறியதாவது: பொள்ளாச்சியில் மழைப்பொழிவு மாதக்கணக்கில் நீடிப்பதால் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 'பிசிஎம்எஸ்' வளாகத்தில் 750 சதுர அடியில் சோலார் உலர்களம் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சோலார் குடில் 'பாலி எத்திலின்' எனப்படும் 200 மைக்ரான் பிளாஸ்டிக் கவர் கொண்டு போர்த்தப்பட்டுள்ளது. வெளிக்காற்று உள்ளே புகாதவாறு இருக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. லேசான வெயில் இருந்தாலே சோலார் உலர்களத்தினுள் வெப்பம் அதிகமாக இருக்கும். சராசரியாக 60 -80 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பம் இருக்கும். இந்த உலர்களத்தில் ஒரே நேரத்தில் 10,000 தேங்காய்களை உடைத்து உலர வைத்து கொப்பரை உற்பத்தி செய்ய மூன்றடுக்கு ரேக் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் சிரட்டையுடன் தேங்காய் உலர வைக்க வேண்டும். பின், சிரட்டையை அகற்றி விட்டு, கொப்பரையை உலர வைத்தால் கொப்பரையின் ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு வந்து விடும். நான்கு நாட்களில் கொப்பரை தயாரிக்கும் பணி முடிந்து விடுகிறது. இயற்கை முறையில் சுத்தமான கொப்பரை உற்பத்தி செய்யப்படுகிறது. சோலார் உலர்களத்தில் செயற்கையாக,'பயோ மாஸ்' முறையில் தென்னை மட்டை, விறகுகளை பயன்படுத்தி வெப்பம் ஏற்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சோலார் உலர்களத்தில் கொப்பரை உற்பத்தி செய்ய விவசாயிகளிடம் ஒரு கிலோவுக்கு 40 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த தொகை பராமரிப்பு செலவு, கொப்பரை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.