தண்ணீரை தேக்கி வைக்க கண்மாய்களை தூர் வார விவசாயிகள் வலியுறுத்தல்
தண்ணீரை தேக்கி வைக்க கண்மாய்களை தூர் வார விவசாயிகள் வலியுறுத்தல்
தண்ணீரை தேக்கி வைக்க கண்மாய்களை தூர் வார விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 25, 2011 01:58 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் பகுதியில் ஆண்டு முழுவதும் தண்ணீரை
தேக்கி வைக்க ஏதுவாக கண்மாய்களை தூர் வாரி ஆழப்படுத்த வேண்டும் என
விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
திருப்பரங்குன்றத்தை சுற்றி பானாங்குளம்,
செவ்வந்திகுளம், குறுக்கட்டான், ஆரியங்குளம், மேல நெடுங்குளம், தென்கால்,
நிலையூர் போன்ற கண்மாய்கள் உள்ளன. இக்கண்மாய்கள் தண்ணீர் மூலம் 10 ஆயிரம்
ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அந்தந்த பகுதிகளின் நிலத்தடி
மற்றும் குடிநீர் ஆதாரமாகவும் இக்கண்மாய்கள் உள்ளன. வைகை அணையில் இருந்து
திறக்கப்படும் தண்ணீர், இக்கண்மாய்களுக்கு பாசன கால்வாய்கள் மூலம்
வருகிறது. விவசாயத்திற்காக கண்மாய் தண்ணீர் திறக்கப்படுவதால், குறிப்பிட்ட
காலத்திற்குள் தண்ணீர் வெளியேறி விடுகிறது. இதனால் கண்மாய்கள் வறண்டு
கோடையில் நிலத்தடிநீர் வெகுவாக குறைந்து தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது.
நான்கு வழிச்சாலைக்காக நிலையூர் பெரிய கண்மாய், திருப்பரங்குன்றம் பை-பாஸ்
ரோடு விரிவாக்கத்திற்காக, தென்காய் கண்மாயில் மண் எடுக்கப்பட்டது. இதனால்
ஆங்காங்கே பள்ளம்மேடுகளாக கண்மாய்கள் காட்சியளிக்கின்றன. அந்த பள்ளங்களில்
மட்டும் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. அணை தண்ணீர் குறிப்பிட்ட
நாட்களுக்கு மட்டும் கண்மாய்களுக்கு வருவதாலும், பாசனத்திற்கு
திறக்கப்படுவதாலும், தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. இக்கண்மாய்களை தூர்
வாரி ஆழப்படுத்தினால், மழை நீரை வைத்து ஆண்டு முழுவதும் தண்ணீரை தேக்கி
வைக்க முடியும். குடிநீர் பஞ்சமும் ஏற்படாது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி
வருகின்றனர்.