Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நீலகிரி தேயிலை தோட்டங்களில் அனுமதியில்லா "சொகுசு பங்களாக்கள்'

நீலகிரி தேயிலை தோட்டங்களில் அனுமதியில்லா "சொகுசு பங்களாக்கள்'

நீலகிரி தேயிலை தோட்டங்களில் அனுமதியில்லா "சொகுசு பங்களாக்கள்'

நீலகிரி தேயிலை தோட்டங்களில் அனுமதியில்லா "சொகுசு பங்களாக்கள்'

ADDED : ஆக 28, 2011 01:11 AM


Google News
குன்னூர் : குன்னூர், கோத்தகிரியில், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாமல், தேயிலை தோட்டங்களுக்குள் சொகுசு பங்களாக்கள் கட்டப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில், குன்னூர், கோத்தகிரி, குந்தா உட்பட இடங்களில், பல 100 ஏக்கரில், தேயிலை தோட்டங்கள் உள்ளன. தேயிலை தொழில் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள், ஆட்கள் பற்றாக்குறை உட்பட காரணங்களால், விவசாயிகள் பலர் தங்கள் தோட்டங்களை விற்று வருகின்றனர். ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரின் 'பிளாட்' பட்டியலில், நீலகிரி தேயிலை தோட்டங்கள் இடம் பிடித்து வருகின்றன. தேயிலை தோட்டங்களை தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர்; அவர்கள், தேயிலை தோட்டங்களை அழித்து ஆடம்பர சொகுசு பங்களா கட்டுவதில் முனைப்பு காட்டுகின்றனர். தேயிலை தோட்டங்களை அழித்து, வீடு உட்பட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், பல இடங்களில் தேயிலை தோட்டங்கள் கான்கிரீட் காடுகளாக மாறி வருகின்றன. குன்னூர் புரூக்லேண்ட்ஸ் பகுதியில், சுமார் 60 சென்ட் தேயிலை தோட்டத்தை வாங்கிய தொழிலதிபர் ஒருவர்,தேயிலை தோட்டத்தை அழித்து, சாலை அமைத்த நிலையில், மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த புகாரால், அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளை நிறுத்தினர். இத்தகைய விதிமீறலுக்கு காரணமானவர்கள் குறித்த விசாரணை நடந்து வருகிறது. கோத்தகிரியில், சுமார் 100 ஏக்கர் தேயிலை தோட்டத்தில், பிளாட் கட்டி, ஒரு பிளாட் தலா 1.25 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது; அவற்றை, 'சில பிரபல சினிமா பின்னணி பாடகர்கள், இசையமைப்பாளர்கள், சில ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் விலைக்கு வாங்கி வருகின்றனர்' என தெரிகிறது. குந்தாவிலும் இதே போன்று பிளாட் விற்பனை களை கட்டியுள்ளது.குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலர் சபாபதி கூறுகையில், ''இயற்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விவசாய தோட்ட அழிப்பு விவகாரத்தில், மாவட்ட நிர்வாகத்தின் நிலைபாடை தெளிவுப்படுத்த வேண்டும்,'' என்றார்.தேசிய பசுமை திட்ட முதன்மை பயிற்றுனர் மனோகரன் கூறுகையில், ''பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள குந்தா கிண்ணக்கொரையில், சுமார் 100 ஏக்கர் தேயிலை தோட்டம், பிளாட் போடப்பட்டு விற்கப்பட்டு வருகிறது'' என்றார்.நில நடுக்க பட்டியலில் இடம்பெற்றுள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாய பூமிகள், கட்டட காடுகளாக மாறாமல் இருக்க, மாநில அரசின் சிறப்பு கவனம் அவசர அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us