ADDED : ஆக 09, 2011 01:16 AM
ராமநாதபுரம்: தமிழகத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்தபின், சிறிதுகாலம் கடத்தல் மற்றும் ஊடுருவல் முற்றிலும் குறைந்திருந்தது. சில மாதங்களாக கடத்தல் மீண்டும் அதிகரித்துள்ளது. சுதந்திரதின விழா கொண்டாட உள்ள நிலையில் தமிழகம் மட்டுமின்றி வேறு ஏதாவது ஒரு பகுதியில் அசம்பாவித செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என்ற அச்சத்தால் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளனர். பாதுகாப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: சில தினத்திற்கு முன் ராமேஸ்வரம் வந்த இலங்கையர் ஒருவர், போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார். இலங்கையில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, இலங்கையர் கூறியது முற்றிலும் தவறானது என தெரியவந்தது. இதுபோல் அகதிகள் போர்வையில் யாரும் ஊடுருவ வாய்ப்பு உள்ளது என்பதால் தீவிரமாக கண்காணித்தும், கடல் மார்க்கமாக வருவோர் குறித்து இலங்கையிலும் விசாரித்து வழக்கு பதிவு செய்யப்படுகிறது, என்றார்.


