மோசடி, மிரட்டல் வழக்கில் ஐயப்பன், பைனான்சியர் கைது
மோசடி, மிரட்டல் வழக்கில் ஐயப்பன், பைனான்சியர் கைது
மோசடி, மிரட்டல் வழக்கில் ஐயப்பன், பைனான்சியர் கைது
ADDED : ஜூலை 17, 2011 01:06 AM
சென்னை : 'எந்திரன்' பட வினியோக விவகாரத்தில் 3.53 கோடி ரூபாய் தராமல், மிரட்டல் விடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில், சக்சேனாவின் கூட்டாளி ஐயப்பன், சினிமா பைனான்சியர் அழகர் இருவரையும் கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் இயங்கி வரும், ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் கணேசன். இவர், சென்னை கே.கே.நகர் போலீசில் புகார் ஒன்றை நேற்று முன்தினம் அளித்தார். அதில், சென்னை, மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில், 'எந்திரன்' படத்தை வினியோகிப்பதற்கான உரிமையை, சன், 'பிக்சர்ஸ்' நிறுவனத்தில் இருந்து ஜெமினி பிலிம் சர்க்யூட் பெற்றது. இப்பகுதிகளில் உள்ள தியேட்டர்களில், சக்சேனாவின் கூட்டாளி ஐயப்பன் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சகோதரர் அழகர் ஆகியோர் மூலம், 'எந்திரன்' படம் வெளியிடப்பட்டது. அப்பகுதிகளில் படம் திரையிடப்பட்டு, 8 கோடி ரூபாய் வசூலானது. வசூல் தொகையில், 4.47 கோடி ரூபாயை மட்டும் தந்துவிட்டு, மீதமுள்ள 3.53 கோடி ரூபாயை கேட்டபோது, ஐயப்பனும், அழகரும் தர மறுத்ததுடன், மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசில் வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, பைனான்சியர் அழகர் கைது செய்யப்பட்டார்.
ஐயப்பன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதால், அவரை இந்த வழக்கில் கைது செய்வதற்கான ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைத்துள்ளனர். இதற்கிடையில், தனக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பதால், மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது என ஐயப்பன் கோர்ட்டில் தெரிவித்ததை தொடர்ந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு நேற்று சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டதாக தெரிகிறது. சக்சேனா, ஐயப்பன் உள்ளிட்டோரைத் தொடர்ந்து, அவர்களுக்கு உதவி செய்த சினிமா பைனான்சியர்கள் சிலரும் புகார்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.