Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா தேவை : ராஜ்யசபாவில் வலியுறுத்தல்

அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா தேவை : ராஜ்யசபாவில் வலியுறுத்தல்

அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா தேவை : ராஜ்யசபாவில் வலியுறுத்தல்

அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா தேவை : ராஜ்யசபாவில் வலியுறுத்தல்

ADDED : ஆக 27, 2011 10:59 PM


Google News
Latest Tamil News

புதுடில்லி : பிரதமர் பதவி வகிப்போரை லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு, மத்திய அமைச்சர் அஸ்வனி குமார், ராஜ்யசபாவில் நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் நேற்று நடந்த, லோக்பால் மசோதா குறித்த விவாதத்தில் பங்கேற்று, காங்கிரஸ் உறுப்பினரும், மத்திய திட்டத் துறை இணை அமைச்சருமான அஸ்வனி குமார் பேசியதாவது: அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும் என, ஹசாரே வலியுறுத்தியுள்ளார். நம் நாட்டின் கூட்டாட்சி நடைமுறைக்கு, சந்தேகத்தை ஏற்படுத்தும் எந்த வகையான முயற்சியிலும் ஈடுபடக் கூடாது. லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, பார்லிமென்டுக்கு வெளியில் இருப்பவர்கள், நெருக்கடி கொடுக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மத்திய அமைச்சரவையை பொறுத்தவரையில், பிரதமர் பதவி வகிப்பவர், மிகவும் முக்கியமானவர். அவரை லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வரும்படி வலியுறுத்துவது சரியல்ல. இவ்வாறு அஸ்வனி குமார் பேசினார்.

மார்க்சிஸ்ட் எம்.பி., சீதாராம் யெச்சூரி பேசுகையில்,''அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும் என்பதை, ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், இதற்கான நியமனங்கள், சம்பந்தபட்ட மாநில அரசுகளால் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பிட்ட சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, பிரதமர் பதவி வகிப்போரøயும், லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க வேண்டும். தேசிய நீதித்துறை ஆணையம் நிறுவப்பட வேண்டும்,'' என்றார்.

தி.மு.க.,வைச் சேர்ந்த திருச்சி சிவா பேசுகையில்,''பிரதமர் பதவி வகிப்போரையும் லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்பது தான், எங்கள் கட்சியின் விருப்பம். ஆனால், அதற்கு சில விதிமுறைகள் அவசியம். நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படையான நடைமுறை அவசியம். லோக்பால் மசோதா, பார்லிமென்ட் நிலைக்குழுவால் ஆய்வு செய்யப்பட வேண்டும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us