ADDED : செப் 04, 2011 10:52 PM
ஊட்டி : ஊட்டியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது.
நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா, ஊட்டி, கோத்தகிரி, கூடலூர்,
குன்னூர், பந்தலூர், நடுவட்டம் ஆகிய பகுதிகளில் கொண்டாடப்பட்டது.
ஊட்டியில் நேற்று இந்து முன்னணி சார்பில் 27 சிலைகள் கரைக்கப்பட்டன.
முன்னதாக ஏ.டி.சி., சுதந்திர திடலில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு
நாக்குபெட்டா படுகர் குல பாதுகாப்பு இயக்க தலைவர் சந்திரன் தலைமை
வகித்தார். பொதுகூட்டம் முடிந்ததும், சிலைகள் அங்கிருந்து எட்டினஸ் சாலை,
சேரிங்கிராஸ் வழியாக காமராஜர் சாகர் அணைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்து
சேவை சங்கம் மற்றும் பிற அமைப்புகள் சார்பில் 46 சிலைகள் மாவட்டத்தின்
பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு, கரைக்கப்பட்டன. ஊர்வலத்தை
முன்னிட்டு ஊட்டி நகரின் பெரும்பாலான கடைகள் நேற்று காலையில் இருந்து
அடைக்கப்பட்டிருந்தது. இரண்டாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்தனர். ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது மக்களிடையே நிம்மதியை
ஏற்படுத்தியது. கூடலூர்: கூடலூர் இந்து முன்னணி சார்பில் பல்வேறு
இடங்களில் வைக்கப்பட்ட 21 விநாயகர் சிலைகள் நேற்று கூடலூர் ராஜகோபாலபுரம்
கொண்டுவரப்பட்டன. மாவட்ட செயலாளர் சாமி தலைமை வகித்தார். தொரப்பள்ளி குனில்
ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. வி.எச்.பி., இந்து அமைப்புகள் சார்பில்
பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 56 விநாயகர் சிலைகள் பாண்டியார்-பொன்னம்புழா
ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. குன்னூர்: குன்னூரில் இந்து அமைப்புகள்
சார்பில் 58 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தொடர் பூஜை,
ஆராதனைகள் நடத்தப்பட்டன. நேற்று சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக
சிம்ஸ்பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து லாஸ் நீர்வீழ்ச்சிக்கு
கொண்டு செல்லப்பட்டன. டி.எஸ்.பி., மாடசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்ட
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பந்தலூர்: பந்தலூரில் வி.எச்.பி., சார்பில் நடத்தப்பட்ட விநாயகர் சதுர்த்தி
ஊர்வலத்தில் 47 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது. வித்யாபாரதி மாவட்ட
அமைப்பு செயலாளர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். வி.எச்.பி., மாவட்ட இணை
பொதுசெயலாளர் குமரன், கோவை மண்டல பொறுப்பாளர் நாச்சிமுத்து உட்பட பலர்
கலந்து கொண்டனர்.