பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது
பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் : மதுரையில் மோசடி கும்பல் கைது
மதுரை : 'பவர்' தரும் பானையை வீட்டில் வைத்தால் பணம் கொட்டும் என, லட்சக்கணக்கில் சுருட்டிய கும்பலை, மதுரை போலீசார் கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் பிரபு, எஸ்.ஐ., பாலமுருகன் தலைமையிலான தனிப்படை, பைகாரா செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது இரு கார்களில் வந்த மோசடி கும்பலைச் சேர்ந்த சிவகாசி அசோகன், 52, முத்தையா, 29, விளாத்திக்குளம் முருகன், 31, ஜெயகுமார், 42, கண்ணன், 37, முருகன், 37, புதுச்சேரி அன்வர்தீன், 30, திருச்செந்தூர் பாலகணேஷ், 31, மதுரை முத்துகுமாரவேல், 36, நத்தம் கோபால்பட்டி பாஸ்கரன், 48, ஆகியோரை கைது செய்தனர். கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே, கோபுர கலசத்தில் 'பவர்' இருப்பதாகக் கருதி, லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள். தாங்கள் ஏமாந்தது போல், மற்றவர்களையும் ஏமாற்ற திட்டமிட்டனர். ஏற்கனவே, 'கோபுர கலசம்' என்றுக்கூறி சில கும்பல் மோசடி செய்வதால், வேறு வகையில் மோசடி செய்ய முடிவு செய்தனர். அப்போது கண்டுபிடித்ததுதான் 'பவர்' பானை. இதில் சக்தி இருப்பதாகக் கூறி தென்மாவட்டங்களில் மோசடி செய்ய ஆரம்பித்தனர்.
கும்பல் தலைவன் அசோகன், சாமியார் போல் வேடமணிந்து, பணம் கொடுத்தவர்களின் வீடுகளுக்கு செல்வார். சில பரிகார பூஜைகள் செய்வது போல் செய்து, பூஜை அறையில் குறிப்பிட்ட இடத்தில் வைத்து வணங்கும்படி கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஆட்களை பொறுத்து, ரூ.3,000 முதல் லட்சக்கணக்கில் இக்கும்பல் 'கட்டணம்' வசூலித்தது. இவர்கள் வேறு எங்கெங்கு மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.


