ஆமதாபாத் நகரில் முக்கிய இடங்களை கண்காணிக்க 300 "சி.சி.டி.வி,' நிறுவ திட்டம்
ஆமதாபாத் நகரில் முக்கிய இடங்களை கண்காணிக்க 300 "சி.சி.டி.வி,' நிறுவ திட்டம்
ஆமதாபாத் நகரில் முக்கிய இடங்களை கண்காணிக்க 300 "சி.சி.டி.வி,' நிறுவ திட்டம்
ADDED : ஜூலை 26, 2011 12:20 AM
ஆமதாபாத் : மும்பையில், சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், முக்கியமான நூறு இடங்களில், 300 ரகசிய கண்காணிப்பு கேமராக்களை நிறுவ, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஆமதாபாத் போலீஸ் கமிஷனர் எஸ்.கே.சின்கா கூறியதாவது: சமீபத்தில், மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள், நமக்கு சில பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளன.
குண்டு வைக்கும் பயங்கரவாதிகளை அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது. எனவே, மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இடங்களிலும், முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும், ரகசிய கண்காணிப்பு கேமராக்களை, பொருத்துவதன் மூலம், இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும்.
இதன்படி, ஆமதாபாத்தில், நகருக்குள் நுழையும் இடம், பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட, மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இடங்களில், ரகசிய கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த திட்டமிட்டுள்ளோம்.
முக்கியமான நூறு இடங்களில், 300 ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. அரசு சார்பில் விதிமுறைகள் உள்ளதால், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில், கால தாமதம் ஆகும். எனவே, ஆமதாபாத் குடிமகன்கள் பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தி, இந்த அமைப்பு திரட்டும் நிதியின் மூலம், இத்திட்டத்தை செயல்படுத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது. கேமராக்களில் பதிவாகும் காட்சிகள், '3ஜி' பிராட் பாண்ட் நெட்ஒர்க் மூலமாக, போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படும். கேமராக்களில் பதிவாகும் காட்சிகள், குண்டு வைக்கும் பயங்கரவாதிகளை அடையாளம் காட்டுவதோடு அல்லாமல், உள்ளூர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளையும் அடையாளம் காட்டுவதற்குப் பயன்படும். இவ்வாறு சின்கா கூறினார்.