Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு

துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு

துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு

துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு

ADDED : ஆக 23, 2011 02:03 AM


Google News
அடையாறு : அடையாறு, துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில், போதிய குடிநீர் வசதி இல்லாத காரணத்தால், அங்கு வரும் ஏராளமான நோயாளிகள் தவித்து வருகின்றனர்அடையாறு, கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனை. ஆந்திர மகிள சபா என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் இந்த மருத்துவமனையில், பொதுச் சிகிச்சை, மகப்பேறு, தோல், கண், காது, மூக்கு அறுவை மற்றும் வயதானவர்களுக்கான சிறப்பு சிகிச்சைகள் உள்ளிட்டவை அளிக்கப்படுகின்றன.தினசரி 150க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 80 பேர் வரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு, சிகிச்சை மற்றும் நோயாளிகள் பயன்பாட்டிற்காக நாள் ஒன்றுக்கு சராசரியாக 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், குடிநீர் வாரியத்தின் மூலம் தினசரி 3,000 லிட்டர் குடிநீர் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.இதனால், அங்கு சிகிச்சை பெற்று வரும் ஏராளமான நோயாளிகள், போதிய குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு தற்காலிக தீர்வாக, தற்போது தனியார் லாரிகளில் விற்பனை செய்யப்படும் குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், லாரி ஒன்றுக்கு 8,000 வரை வசூலிப்பதால், போதிய நீரை பெற முடியாமல் மருத்துவமனை நிர்வாகம் தவித்து வருகிறது.இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சிவராமன் கூறுகையில், 'தொண்டு நிறுவனத்தின் சார்பில் இயங்கும் இந்த மருத்துவமனையில் சிகிச்சைகளுக்கு குறைந்த கட்டணமே பெறப்படுவதால், சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான நோயாளிகள் இந்த மருத்துவமனையில் பயனடைந்து வருகின்றனர். ஆனால், இங்கு தண்ணீர் பெரும் பிரச்னையாக உள்ளது.

சுனாமிக்கு பின்னர் இப்பகுதியில் நிலத்தடி நீர் உப்பாக மாறிப் போனதால், குடிநீர் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் நீரையே நாங்கள் நம்பியுள்ளோம். ஆனால், குடிநீர் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. பைப் லைனில் ஏற்பட்டுள்ள அடைப்பின் காரணமாகவே இப்பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது.இதை, சரி செய்யக் கோரி, கடந்த சில வருடங்களாக குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் கொடுத்து வருகிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும், மருத்துவமனையில் கிடைக்கும் வருவாய் மற்றும் நன்கொடைகளைக் கொண்டு இயங்குவதால், தினசரி அதிகளவு பணம் செலவு செய்து, வெளியில் தண்ணீர் வாங்க முடியவில்லை. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பைப் லைன் அமைத்து பல வருடங்கள் ஆகிவிட்ட காரணத்தால், ஏராளமான இரும்புத் துகள்கள் அடைத்துள்ளன. பம்பிங் ஸ்டேஷனில் இருந்து மருத்துவமனை வரையுள்ள பழைய பைப் லைனை மாற்றிவிட்டு புதிய பைப் லைன் அமைத்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும். எனவே, அதற்கான தொகை யை மருத்துவமனை நிர்வாகம் செலுத்தினால், விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us