உடற்கல்விக்கு புத்துயிர் கிடைக்குமா? : கல்வி மானியக் கோரிக்கையில் எதிர்பார்ப்பு
உடற்கல்விக்கு புத்துயிர் கிடைக்குமா? : கல்வி மானியக் கோரிக்கையில் எதிர்பார்ப்பு
உடற்கல்விக்கு புத்துயிர் கிடைக்குமா? : கல்வி மானியக் கோரிக்கையில் எதிர்பார்ப்பு
சென்னை : உடற்கல்விக்கு புத்துயிர் அளிக்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகுமா என, உடற்கல்வி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை வளர்க்கவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் எந்தவித நிதி ஒதுக்கீடும் கிடையாது. பெயருக்கு மட்டுமே உடற்கல்வி இருந்து வருகிறது. உடற்கல்வி ஆசிரியர்களை, வேறு பணிகளுக்கு பயன்படுத்தும் கொடுமையும் நடக்கிறது. மற்ற பாடங்களுக்கு பாடப் புத்தகங்கள் இருப்பதுபோல், உடற்கல்விக்கும் தனி பாடப் புத்தகம் உருவாக்க வேண்டும் என்பது, உடற்கல்வி ஆசிரியர்களின் கோரிக்கை. இதற்காக, ஏற்கனவே ஒரு குழு அமைக்கப்பட்டு, பாடத்திட்டங்களும் தயாரித்து, கல்வித்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. அதை அப்படியே கிடப்பில் போடாமல், பாடப் புத்தகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, உடற்கல்வி ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து, சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சீனிவாசன் கூறும்போது,'உடற்கல்விக்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் எப்போது விமோசனம் கிடைக்கும் என்று தெரியவில்லை. இது தொடர்பாக, ஒவ்வொரு ஆண்டும், பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையில் எதிர்பார்க்கிறோம். ஆனால், உடற்கல்வியை மேம்படுத்தும் வகையில், எந்தவித அறிவிப்பும் வருவதில்லை. இதே நிலை தொடர்ந்தால், அரசு பள்ளிகளில் உடற்கல்வி, இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்' என்றார்.


