Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பன்னாட்டு கம்பெனிகளின் வியாபார கருவியாக மாறிவிட்டது படிப்பு : கலந்துரையாடலில் கல்வியாளர்கள் வேதனை

பன்னாட்டு கம்பெனிகளின் வியாபார கருவியாக மாறிவிட்டது படிப்பு : கலந்துரையாடலில் கல்வியாளர்கள் வேதனை

பன்னாட்டு கம்பெனிகளின் வியாபார கருவியாக மாறிவிட்டது படிப்பு : கலந்துரையாடலில் கல்வியாளர்கள் வேதனை

பன்னாட்டு கம்பெனிகளின் வியாபார கருவியாக மாறிவிட்டது படிப்பு : கலந்துரையாடலில் கல்வியாளர்கள் வேதனை

ADDED : ஜூலை 17, 2011 01:26 AM


Google News



குன்னூர் : 'ஆங்கிலேயேர் காலத்தில் இந்தியர்களை பிரித்தாள்வதற்காக உருவாக்கப்பட்ட கல்வி முறையே தற்போதும் தொடர்கிறது,' என குன்னூரில் நடந்த கல்விச் சூழல் கருத்தரங்கில் வேதனை தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 'இன்றைய கல்விச் சூழல்' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி குன்னூரில் நடந்தது. முன்னாள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பெள்ளி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் ஆசிரியர் ராஜூ வரவேற்று பேசுகையில், ''சிறந்த குடிமக்களை உருவாக்கும் உயரிய நோக்கம் கொண்ட கல்வி, பணம் சம்பாதிக்கும் கருவியாக மாறிவிட்டது. இன்றைய கல்விச்சூழல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, விவாதம், கருத்து பரிமாற்றம் நடத்தப்பட வேண்டும்,'' என்றார்.



சமூக உரிமைக்கான ஆசிரியர் இயக்க செயலர் சுப்ரமணியன் பேசுகையில், ''அரசுப் பள்ளிகளின் தரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும். அரசுப் பள்ளி கல்வி திட்டத்தில் உள்ள குறைபாடால் தான், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு நிலவுகிறது,'' என்றார். குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் தலைமையாசிரியர் மனோகரன் பேசுகையில், ''ஆங்கிலேயர் ஆட்சியில், இந்தியர்களை பிரித்தாள்வதற்காக வகுக்கப்பட்ட கல்வி முறையே இன்றும் தொடர்கிறது. சிறந்த குடிமக்களாக மாணவர்களை உருவாக்க வேண்டிய கல்வி, பன்னாட்டு நிறுவனங்களின் வியாபார தேவைக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தி வருகிறது,'' என்றார்.



சங்க துணைத் தலைவர் ரமணி பேசுகையில், ''அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாதது தான், அரசுப் பள்ளிகளின் தரம் குறைய காரணம்,'' என்றார். குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி பேராசிரியை சுஜாதா பேசுகையில், ''தாய்மொழிக் கல்வி தான் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கும். உயர்கல்வித் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசின் செயல் கண்டிக்கத்தக்கது,'' என்றார். குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலர் சபாபதி, தனியார் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழக செயலர் முகமது சலீம் பேசுகையில், ''சமச்சீர் கல்வியை அமல்படுத்தி, தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை அரசு ஒழுங்குப்படுத்த வேண்டும்,'' என்றனர். கல்வியாளர் சிவக்குமார் பேசுகையில், ''அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டு, சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்கான ஆற்றல், அறிவை பெற்றால் அரசு பள்ளிகளின் தரம் உயரும்,'' என்றார்.



குன்னூர் பாஸ்டியர் ஆய்வக உதவி இயக்குனர் டாக்டர். வெங்கட்ரமணா பேசுகையில், ''அரசு நிறுவனங்களின் சேவையில் தரம் குறைந்துள்ளது என, மக்கள் மத்தியில் புதைந்துள்ள கருத்து, மாற்றப்பட வேண்டும்; அதற்கேற்ப அரசு செயல்பட வேண்டும்,'' என்றார். சமூக சேவகர் ஆறுமுகம் பேசுகையில், ''அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைக்க வேண்டும்,'' என்றார். மணிவசந்தம் நன்றி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us