Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/780 சதுர அடி இடத்தை ஆக்கிரமித்த கருணாநிதி:சட்டப்படி நடவடிக்கை எடுக்க அமைச்சர் உறுதி

780 சதுர அடி இடத்தை ஆக்கிரமித்த கருணாநிதி:சட்டப்படி நடவடிக்கை எடுக்க அமைச்சர் உறுதி

780 சதுர அடி இடத்தை ஆக்கிரமித்த கருணாநிதி:சட்டப்படி நடவடிக்கை எடுக்க அமைச்சர் உறுதி

780 சதுர அடி இடத்தை ஆக்கிரமித்த கருணாநிதி:சட்டப்படி நடவடிக்கை எடுக்க அமைச்சர் உறுதி

ADDED : செப் 05, 2011 11:48 PM


Google News

சென்னை:''சென்னை கோபாலபுரத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான, 780 சதுர அடி நிலத்தை, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆக்கிரமித்து, பயன்படுத்தி வருகிறார்.

இந்த இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி கூறினார்.சட்டசபையில், சென்னையில் கோபாலபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது குறித்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.



இதற்கு, அமைச்சர் முனுசாமி அளித்த பதில்:சைதாப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி மற்றும் தியாகராய நகர் போன்ற பகுதிகளில், குப்பை மற்றும் கழிவுகளை அகற்றுவதற்காக, தனி சந்துகள் பராமரிக்கப்பட்டு வந்தன. காலப்போக்கில் இந்தப் பணிகள் நவீனமயமாக்கப்பட்டதால், அந்த சந்துகள், பயன்பாடின்றி உள்ளன. பல்வேறு மண்டலங்களில் உள்ள பயன்பாடற்ற சந்துகளை, மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது.இதுவரை முடிந்த ஆய்வுகளில், ஏழாவது மண்டல பகுதியான கோபாலபுரத்தில், நான்காவது தெரு மற்றும் ஐந்தாவது தெருவிற்கு இடைப்பட்ட பகுதியில், 653 அடி நீளமும், 12 அடி அகலமும் உள்ள சந்தில், நான்கு ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.



இதில், ஒரு ஆக்கிரமிப்பு, முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தின் பின்புறம் உள்ளது. 780 சதுர அடி நிலம் கொண்ட அப்பகுதியில், பாதுகாவலர் நிழற்கூடம் மற்றும் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.கருணாநிதி ஆக்கிரமிப்பு செய்த, 780 சதுர அடி நிலத்தை அவரிடமே ஒப்படைக்க, 1967ல், மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 1968, மே 22ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கருணாநிதியிடம் நிலத்தை ஒப்படைப்பு செய்ததற்காக, சென்னை மாவட்ட கலெக்டரால், 3,250 ரூபாய் அரசின் கணக்கில் பெறப்பட்டுள்ளது.

அதன்பின், 1969, மே 12ல், கருணாநிதியின் கோரிக்கைபடி நில ஒப்படைப்பு ரத்து செய்யப்பட்டு, அரசின் கணக்கில் பெறப்பட்ட தொகையை திருப்பி அளிக்கவும், அதற்கேற்ப ஆவணங்களில் உரிய மாற்றங்களை செய்யவும், சென்னை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.



ஆனால், நில ஒப்படை ரத்து செய்யப்பட்ட பின்பும், இந்நிலம் தொடர்ந்து கருணாநிதியின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.கடந்த, 1978ல், அந்நிலத்தை தனக்கு மறு ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். இது சம்பந்தமாக, மாநகராட்சி எவ்வித முடிவும் எடுக்கவில்லை.இதற்கிடையே, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரும், தற்போது சட்டசபை உறுப்பினருமான வெற்றிவேல், இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, கழிவுநீர் குழாய் மேம்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என, மாநகராட்சியில் கோரிக்கை விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பு இடத்தை மாநகராட்சி எடுத்துக்கொள்ள, மாவட்ட கலெக்டரை கேட்டுக்கொள்ளும் தீர்மானம், 2003ல் நிறைவேற்றப்பட்டது.



இதைத்தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இந்த இடம் கருணாநிதியின் பயன்பாட்டில் தொடர்ந்து இருந்து வருகிறது. இதுவரை துப்புரவு சந்துக்களில் கண்டுபிடித்த ஆக்கிரமிப்புகள், இனிமேல் கண்டறியப்படும் ஆக்கிரமிப்புகளின் மீது சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.ஷெனாய் நகரில், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மாமியார் பெயரில் நில ஆக்கிரமிப்பு செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகள், கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இதில், மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதுடன், அறிவாலயத்தின் முன்புறம் உள்ள மாநகராட்சி இடத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் முனுசாமி பேசினார்.



குளத்தை மூடிய தேவராஜ்:அமைச்சர் முனுசாமி பேசும்போது, 'கருணாநிதி ஆக்கிரமிப்பு செய்த நிலம் தொடர்பாக, சுடுகின்ற உண்மையான சொற்களை தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் தான், தி.மு.க., உறுப்பினர்கள் வெளியேறி விட்டனர்' என்றார்.வருவாய்த் துறை அமைச்சர் தங்கமணி பேசும்போது, 'ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜ், கொரட்டூர் பகுதியில் இருந்த ஒரு ஏக்கர், ஆறு சென்ட் பரப்பளவு கொண்ட குளத்தை சமப்படுத்தி, வேலி போட்டு ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இந்த இடம் நேற்று மீட்கப்பட்டது' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us