திபெத்தின் 30 இடங்களுக்கு பெயர் மாற்றம்; சீனாவின் சேட்டைக்கு மத்திய அரசு பதிலடி
திபெத்தின் 30 இடங்களுக்கு பெயர் மாற்றம்; சீனாவின் சேட்டைக்கு மத்திய அரசு பதிலடி
திபெத்தின் 30 இடங்களுக்கு பெயர் மாற்றம்; சீனாவின் சேட்டைக்கு மத்திய அரசு பதிலடி
UPDATED : ஜூன் 12, 2024 07:11 AM
ADDED : ஜூன் 12, 2024 02:18 AM

புதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தின் 30 இடங்களுக்கு பெயர்களை சூட்டிய சீனாவின் சேட்டைக்கு பதிலடி தரும் விதமாக திபெத்தில், 30 இடங்களுக்கு புதிய பெயர்களை சூட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியா - சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வந்தாலும், 2020 மே 5ல் லடாக் எல்லையை சீனா ஆக்கிரமிக்க முயன்றபோது மோதலாக வெடித்தது.
பாங்காங் ஸோ பகுதியில் இருநாட்டு வீரர்கள் மத்தியில் சண்டையாக உருவெடுத்தது.
இந்த சம்பவத்துக்கு பின் இந்தியா - சீனா உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. வர்த்தக உறவு தவிர மற்ற அனைத்து விதமான உறவுகளும் சுமுகமாக இல்லை.
21 சுற்றுகள்
இந்த எல்லை பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இருநாட்டு ராணுவம் மற்றும் துாதரக அளவில், 21 சுற்றுகள் பேச்சு நடந்துள்ளது. தீர்வு எட்டப்படவில்லை.
இதற்கிடையே, இந்தியாவை உசுப்பேற்றும் விதமான சேட்டைகளில் சீனா அவ்வப்போது ஈடுபட்டு வருகிறது.
அந்த வரிசையில், நம் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அங்குள்ள 30 இடங்களுக்கு சீன மொழியில் கடந்த ஏப்ரல் மாதம் பெயர்களை மாற்றியது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, 'புதிதாக பெயர்களை சூட்டுவதன் வாயிலாக, அருணாச்சல பிரதேசம் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதி என்ற உண்மை நிலை மாறிவிடாது' என, தெரிவித்தது.
சீனாவின் இதுபோன்ற அத்துமீறல்களுக்கு பதிலடி தர மத்திய அரசு முழு வேகத்தில் தயாராகி விட்டது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவியேற்ற சூட்டோடு சூடாக, சீனாவுக்கு தகுந்த பாடம் கற்பிக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது.
அரசின் நோக்கம்
திபெத்தில், இந்தியா வசம் உள்ள 30 இடங்களுக்கு இந்திய மொழியில் புதிய பெயர்களை சூட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக, பிராந்திய உரிமையை உறுதிப்படுத்துவதே நம் அரசின் நோக்கம்.
புதிய பெயர் சூட்டும் இடங்களின் பட்டியலில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைப் பிரதேசங்கள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைவழிப்பாதை மற்றும் ஒரு நிலப்பரப்பு இடம் பெற்றுள்ளன.
திபெத் பிராந்தியத்தின் வரலாற்று ஆராய்ச்சி அடிப்படையில் சூட்டப்பட்டுள்ள இந்த பெயர்களை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது.
இந்த புதிய பெயர் பட்டியலுடன் கூடிய எல்லை கட்டுப்பாட்டு பகுதியை வரையறுக்கும் வரைபடத்தையும் நம் ராணுவம் விரைவில் வெளியிட உள்ளது.
இது குறித்து நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடனான உறவு மற்றும் சிக்கல்கள் வெவ்வேறானவை. சீனாவுடன் தொடர்ந்து வரும் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதே எங்கள் நோக்கம்.
ஆனால், பாகிஸ்தானுடன் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட முயற்சித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.