ADDED : அக் 02, 2011 12:04 AM
தஞ்சாவூர்: தஞ்சையில் பெய்து வரும் தொடர் கனமழையால் குறுவை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில்40 ஆயிரத்து 283 ஹெக்டேர் பரப்பில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகளில் அறுவடையும் நடந்து வருகிறது. ஆனால் தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், மின்வெட்டாலும் விவசாயிகள் பெரும் துன்பத்தை சந்தித்து வருகின்றனர். கனமழை: தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இடி, மின்னலோடு, சூறாவளி காற்றும் சேர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் விவசாயிகளோ வெளியே சொல்ல முடியாத துயர நிலையை அடைந்துள்ளனர். ஏனெனில், தற்போது நெற்பயிர்கள் யாவும் தø குனிந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
இந்த பயிர்களில் பெரும் மழை விழும்போது நெல்மணிகள் யாவும் சிதறி வயலிலேயே விழுந்து விடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு வெறும் வைக்கோல்தான் கிடைக்கிறது. இது ஒரு பக்கம் எனில் தொடர்ந்து பெய்து வரும் மழையின்போது ஏற்பட்ட இடி தாக்குதலில் தஞ்சை பெரிய கோவிலில் சேதம் ஏற்பட்டது. கடந்த மூன்று நாளுக்கு முன் நடுவூர் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், செல்வராஜ் இருவரும் இடி தாக்கி பலியாகினர். இவ்வாறு தொடர்ந்து இயற்கையின் கோர தாண்டவம் தஞ்சையில் நீடிப்பதால் விவசாயிகளும்,மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


