தமிழகத்தில் புதிய தொழில் கொள்கை எப்போது?
தமிழகத்தில் புதிய தொழில் கொள்கை எப்போது?
தமிழகத்தில் புதிய தொழில் கொள்கை எப்போது?
ADDED : ஆக 17, 2011 11:36 PM
சென்னை : ''தொழில்துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், ஓரிரு மாதங்களில் புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்படும்,'' என்று, தொழில்துறை அமைச்சர் வேலுமணி கூறினார்.
சட்டசபையில், தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து, அமைச்சர் வேலுமணி பேசியதாவது: சட்டம் - ஒழுங்கு குறித்து, கருணாநிதி கருத்து தெரிவித்திருக்கிறார்.
இரண்டு ஆட்சியிலும் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து ஒப்பிட்டுப் பார்த்தால், அ.தி.மு.க., ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பது தெரியவரும். தமிழ், தமிழ் என்று தமிழை வைத்து காசு பார்த்தவர் தான் கருணாநிதி. கேபிள் 'டிவி', சினிமாத்துறை, ஊடகம், பத்திரிகை என, ஒரு துறை விடாமல், அவர்களின் சொந்த தொழில்களை முன்னேற்றுவதற்கு, அரசு நிர்வாகத்தை பயன்படுத்தினர். அ.தி.மு.க., ஆட்சியில் தான், அனைத்து துறைகளும் முன்னேறுகின்றன. குறிப்பாக, 1991-96 வரையான ஆட்சி காலத்திலும், 2001-06 வரையிலான ஆட்சி காலத்திலும், தொழில்துறையை ஊக்கப்படுத்தும் வகையில், முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இப்போதும், பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார். தொழில்துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், ஓரிரு மாதங்களில், புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்படும். பல்வேறு நாடுகளின் முதலீடுகளை ஈர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தின் பிற பகுதிகளிலும் புதிய தொழில்கள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு மாவட்டங்களில், புதிதாக சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க, 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விவசாயம் செய்யப்படாத தரிசு இடங்களும், இதர இடங்களும் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களில், பெட்ரோலியம் மற்றும் ரசாயனப்பொருட்கள் தொழிற்சாலைகள் அமைக்கப்படும். ஜல்லி, செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகளை குறைக்க, ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. விரைவில், சிமென்ட் விலையும் குறையும். இவ்வாறு அமைச்சர் வேலுமணி பேசினார்.


