ADDED : ஆக 08, 2011 02:09 AM

சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அருகே, வி.சி., கட்சி பிரமுகரைக் கொலை
செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி, கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால்
பதட்டம் நிலவியது.சேத்தியாத்தோப்பு அடுத்த, முடிகண்டநல்லூரைச் சேர்ந்த
ராமசாமி மகன் உதயகுமார்,35, வி.சி., கட்சித் தொழிலாளர் முன்னணி மாவட்ட
துணைச் செயலர்.
இதே ஊரைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் முடிகொண்டான் (எ)
செந்தில்குமார். வி.சி., கட்சி மாநில ஊடக மையச் செயலர்.இருவருக்கும், கடந்த
சில ஆண்டுகளாக, முன் விரோதம் இருந்து வந்தது. இதனால், இருவரும் இரு
கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் சாந்தி நகர்
மணல் குவாரி அருகே உதயகுமாரை, முடிகொண்டான் மற்றும் அவரது ஆதரவாளர்கள்
கத்தியால் வெட்டிக் கொலை செய்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், சோழத்தரம்
போலீசார் முடிகொண்டான், கதிரவன், தீபன்ராஜ் ஆகியோர் மீது, வழக்கு பதிந்து
தேடி வருகின்றனர். இதற்கிடையே, அப்பகுதியில் பதட்டம் நிலவியதால், போலீசார்
குவிக்கப்பட்டனர்.நேற்று காலை, பிரேத பரிசோதனைக்குப் பின், உதயகுமாரின்
உடல் முடிகண்ட நல்லூருக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், அவரது உறவினர்கள்,
குற்றவாளிகளை கைது செய்த பிறகே, உடலை அடக்கம் செய்வோம் எனக் கூறி, சாலை
மறியலில் ஈடுபட்டனர்.அவர்களிடம் டி.எஸ்.பி.,க்கள் ராஜேந்திரன், நடராஜன்
பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சேத்தியாத்தோப்பிலிருந்து கானூர்
வழியிலான, ஸ்ரீமுஷ்ணம் பஸ் போக்குவரத்து, நேற்று இரண்டாவது நாளாக
தடைபட்டது.


