ADDED : ஜூன் 20, 2025 11:23 PM

இன்றைய நவீன உலகில் காலத்திற்கேற்ப அனைத்தும் வேகமாக மாறி வருகின்றன. இதில், உணவும் அடங்கும். இரண்டு நிமிடத்தில் நுாடுல்ஸ், ப்ரைடு ரைஸ், பன் பட்டர் ஜாம், ஸ்நாக்ஸ் என துரித உணவுகளின் தேவை இன்றைக்கு அதிகமாகி விட்டன. இந்த துரித உணவுகளை ஹோட்டலில் சென்று தான் சாப்பிட வேண்டும் என்ற எந்த அவசியம் இல்லை; வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அப்படி சாலையோரங்களில் விற்கப்படும் உணவான எக் பேஜோவை, வீட்டில் எப்படி செய்து சாப்பிடலாம் என்பதை விளக்கமாக எடுத்துரைக்கிறது இக்கட்டுரை.
செய்முறை
முதலில் நான்கு முட்டைகளை நன்கு வேக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்த பின், காய்ந்த மிளகாய், பெரிய வெங்காயம், பூண்டு அனைத்தையும் தனித்தனியாக சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து கொள்ளவும்.
காய்ந்த மிளகாயை மிக்சியில் போட்டு, கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் வதக்கிய வெங்காயம், பூண்டு, மிளகாயை சேர்த்து பிசையவும். இதில், மிக்சியில் அரைத்து வைத்த மிளகாயையும் சேர்த்து கொள்ளவும்.
பின், எலுமிச்சை பழத்தை சாறாக பிழிந்து ஒரு கப்பிலும், புளி தண்ணீரை ஒரு கப்பிலும், வதக்க பயன்படுத்திய எண்ணெயை ஒரு கப்பிலும் எடுத்து வைத்து கொள்ளவும். இதன்பின், முட்டையை இரண்டாக கீறி, அதில் பிசைந்து வைத்த கலவையை நடுவே வைக்கவும்.
இதில், எலுமிச்சை சாறு, புளி தண்ணீர், எண்ணெய் ஆகியவற்றை லேசாக ஊற்றவும். பின்னர், கொத்தமல்லி இலையை வைக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான மற்றும் சூப்பரான 'எக் பேஜோ' தயார்.
இதை பானி பூரி போல அப்படியே வாயில் போட்டு சாப்பிடவும். அப்போது தான் எக் பேஜோவின் முழு சுவையையும் உணர முடியும்
- நமது நிருபர் -.