Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/பரிமளம் நாட்டிய மாலை

பரிமளம் நாட்டிய மாலை

பரிமளம் நாட்டிய மாலை

பரிமளம் நாட்டிய மாலை

மே 20, 2024


Latest Tamil News
தில்லி தமிழ்ச் சங்கத்தில் முனைவர் வாசுதேவன் குழுவினரின் பரிமளம் என்கிற தலைப்பில் நாட்டிய நிகழ்ச்சி மே 11 தேதி மாலை நடைபெற்றது . முக்கிய விருந்தினர்கள் பாரம்பரிய குத்துவிளக்கேற்ற வரவேற்புரையுடன் நிகழ்வு தொடர்ந்தது.

மூலாதாரனை விக்ன விநாயகனை மூஷிக வாகனாவில் புஷ்பாஞ்சலியில் அடி தொழுது அடுத்து அலாரிப்பில் மகாலெட்சுமி துதி' நமஸ்தேஸ்து மகாமாயே 'வில் தேவியை ஆராதித்து அவையோரை மகிழ்வித்தனர்


பரதத்தில் சிவன் பற்றிய நாட்டியங்கள் மிகவும் விறுவிறுப்பாகவும் அபிநயங்கள் மிகுந்தும் காணப்படுவதுண்டு. அதிலும் சில பாடல்கள் கதை செரிவுடன் அபிநயத்திற்கு உகந்ததாக இருக்கும்.அவ்வகையில் மாடு படுத்திருக்குது மலை போலே.. கேட்பதற்கும் பார்த்துரசிக்கவும் ஒர் உன்னத பாடல்.அதை உருகி உருகி பாட அபிநயிக்க நம்மை எங்கோ இட்டுச்செல்லும் வல்லமை அந்த வரிகளுக்கு உண்டு.


அன்றைய தினம் இந்த பாடலில் வாசுதேவன் நாட்டியத்தில் நம்மை சிவன் சந்நிதி முன்பு கொண்டு நிறுத்திவிட்டார் என்றே சொல்லலாம்.


அவர் பாடகர் ஆனதால் முன்னால் விருத்தமாக வரிகளை அமைத்து சிதம்பரத்தை நம் கண்முன் நடமாடவைத்தார். நந்தனாரின் பக்தி மிகுந்த தவிப்பை பலவாறாக அபிநயித்து நம்மை உருக வைத்தார். பாவத்தை எப்படி தொலைப்பேன் காட்சியாகட்டும், தேர்முனையில் நின்று எட்டி தரிசிக்க முயன்றது என நம்மை அறியாமல் நம்மை அங்கே கொண்டு நிறுத்தி விட்டார். இறுதியில் நந்தி நகர்ந்து தரிசனம் கண்ட காட்சி அரங்கை அதிரவைத்தது. இப்படி கூட அபிநயம் காட்டமுடியுமா என் வியக்க வைத்தது. அருமை. அருமை.


அடுத்து லட்சுமியும் அனந்யாவும் இணைந்த திருப்பாவை பாடல். மாயனை மன்னு வடமதுரை மைந்தனை பாசுரம். கிருஷ்ண லீலைகளை லட்சுமி மிக அற்புதமாக காட்டியதை ரசித்தோம். தெரிந்த கதை. இருவரும் இணைந்து பிருந்தாவனத்திற்கு நம்மை அழைத்துச் சென்று கிருஷ்ணரின் சுட்டி தனத்தை ரசிக்க வைத்தார்கள். பரிமளத்தில் இறுதியாக தசாவதாரம் அடங்கிய ஜெயதேவரின் பிரளய பயோதி ஜலே பாடல். எம் எஸ் அம்மாவின் உயிர் ஓட்டத்துடன் நாம் ரசிக்கும் பல பாடல்களில் இதுவும் ஒன்று. வாசுதேவன் தன் குழுவினருடன் ஒவ்வொரு அவதாரத்தையும் அற்புதமாக நம் கண்முன் கொண்டு வந்தார்.


மிக முக்கியமாக நரசிம்ம அவதாரம். நாம் பல மேடைகளில் பலமுறை பார்த்து ரசித்த பகுதிதான். அதை எப்படி பரிமளிக்க வைத்தார் என்பதை அன்று பார்த்தவர்கள் வியந்தார்கள். வித்யாசமாக நடனகோர்வை அமைத்து நம்மை ரசிக்க வைத்தார் என்பதை அரங்க கரகோஷம் எதிரொலித்தது. அதில் தூணை பிளந்து இரணியனை வதம் செய்யும் காட்சி. கதையில் பிரகலாதன் எந்த தூணை காண்பிக்க போகிறானோ என்ற பதற்றம் நாராயணனுக்கு . நடனத்தில் தூணின் பின்னே நின்ற வாசுதேவன் அதையும் அபிநயித்தது மிக பாராட்டுதலுக்குரியது.


இறுதியில் வாழிய செந்தமிழ் பாடலுடன் பரிமள மாலையை மணக்கும் மாலையாக நிறைவு செய்தார்கள். ஹம்சினி நடன பள்ளி ஆசிரியர் முனைவர் வாசுதேவன் மாணவர்கள் லட்சுமி அனன்யா, அனேகா, ஆர்யா, ஜான்வி ஸ்ரீதர், தேஜோ, ஆகியோர் பங்கேற்றனர்.


தமிழ் சங்க தலைவர் சக்தி பெருமாள் நடன கலைஞர்களை வாழ்த்தி பேசினார். நடனகலைஞர்களின் பெற்றோர்களையும் மேடைக்கு அழைத்து அவர்களின் பங்களிப்பை பாராட்டியது சிறப்பு. தமிழ்சங்கம் சார்பில் இணை செயலர் உமா சத்யமூர்த்தி நன்றி கூறினார்.


- நமது செய்தியாளர் மீனா வெங்கி






      Our Apps Available On




      Dinamalar

      Follow us