Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு மழை; பாகிஸ்தானில் பொதுமக்கள் 30 பேர் பலி

சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு மழை; பாகிஸ்தானில் பொதுமக்கள் 30 பேர் பலி

சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு மழை; பாகிஸ்தானில் பொதுமக்கள் 30 பேர் பலி

சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு மழை; பாகிஸ்தானில் பொதுமக்கள் 30 பேர் பலி

ADDED : செப் 23, 2025 07:29 AM


Google News
Latest Tamil News
இஸ்லாமாபாத்; பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில், விமானப்படை வெடிகுண்டுகளை வீசியதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்.

நம் அண்டை நாடான பாக்., பயங்கரவாத செயல்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவாக இருப்பதாக இந்தியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அப்படி பாகிஸ்தான் அரசும், ராணுவமும், ஐ.எஸ்.ஐ., எனப்படும் உளவு அமைப்பும் ஆதரவு தெரிவித்த பயங்கரவாதிகள், அந்நாட்டிற்கு எதிராகவே சில சமயம் செயல்பட்டு வருகின்றனர்.

தாக்குதல்



இந்த பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த அமைப்புகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பாக்., ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் மற்றொரு அண்டை நாடான ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில், பயங்கரவாத அமைப்புகள் பல இயங்கி வருகின்றன.

இந்நிலையில், ஆப்கான் எல்லையை ஒட்டிய கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் திராஹ் பள்ளத்தாக்கில் உள்ள மாத்ரே தாரா கிராமத்தில் பாக்., விமானப்படை நேற்று அதிகாலை 2:00 மணியளவில் குண்டு வீசியது. ஜே.எப்.-17 போர் விமானங்களிலிருந்து எட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.

மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நடவடிக்கை



தெஹ்ரீக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினரின் மறைவிடங்களை குறிவைத்து, விமானப்படை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி, மலைப்பாங்கான மாகாணமாக கைபர் பக்துங்க்வா உள்ளது. மறைவிடமான பகுதி என்பதால், நம் ராணுவம் மேற்கொண்ட, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கைக்குப் பின், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் தங்கள் இருப்பிடத்தை அங்கு மாற்றியுள்ளனர். இதையறிந்த பாக்., ராணுவம் அவ்வப்போது பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இறங்கி வருகிறது.

கடந்த ஏழு மாதத்தில் மட்டும் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் 605 பயங்கரவாத செயல்கள் நடைபெற்றுள்ளன. இதில், 139 பொதுமக்கள், 79 பாக்., போலீசார் கொல்லப்பட்டுள்ளனர்.

89 பயங்கரவாதிகள் கைது

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண பயங்கரவாத எதிர்ப்பு படை, கடந்த மூன்று மாதங்களில் நாடு முழுதும் 89 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளது. உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், அல் - கொய்தா, தெஹ்ரீக் -இ -- தலிபான் பாகிஸ்தான், ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் சிக்கினர். அவர்களிடம் இருந்து, 20 கிலோ வெடிபொருட்கள், 85 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிப் பொருட்கள் மீட்கப்பட்டன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us