'ஹாட் ஏர் பலுான்' தீப்பிடித்து பிரேசிலில் 8 பேர் பலி
'ஹாட் ஏர் பலுான்' தீப்பிடித்து பிரேசிலில் 8 பேர் பலி
'ஹாட் ஏர் பலுான்' தீப்பிடித்து பிரேசிலில் 8 பேர் பலி
ADDED : ஜூன் 22, 2025 01:43 AM

சான்டா கட்டேரினா: பிரேசிலில், வானில் பறந்து கொண்டிருந்த, 'ஹாட் ஏர் பலுான்' எனப்படும், ராட்சத வெப்பக் காற்றில் பறக்கும் பலுான் தீப்பிடித்து எரிந்ததில், எட்டு பேர் உயிரிழந்தனர்; 13 பேர் காயமடைந்தனர்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின், தென் பகுதியில் அமைந்துள்ளது சான்ட்டா கேட்டரினா மாகாணம். அங்கு கத்தோலிக்க துறவிகளை கொண்டாடும் விழா ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடக்கும்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக, 'ஹாட் ஏர் பலுான்' எனப்படும், ராட்சத பலுானில் வானில் பறந்து மக்கள் கொண்டாடி மகிழ்வர். அவ்வாறு நேற்று பறந்த ஒரு பலுானில், 21 பேர் பயணித்தனர்.
வானில் பறந்து கொண்டிருந்தபோது, பலுானில் திடீரென புகை கிளம்பி தீப்பிடித்து எரியத் துவங்கியது. பலுான் முழுதுமாக எரிந்த நிலையில், மக்கள் நின்று கொண்டிருந்த பகுதி தரையில் விழுந்தது. இதில் எட்டு பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த 13 பேர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
கடந்த ஞாயிறு அன்று, சாவ் பாலோ மாகாணத்தில் இதேபோன்ற மற்றொரு விபத்து நடந்தது. அங்கு ஒரு ராட்சத வெப்ப காற்று பலுான் விழுந்து, 27 வயது பெண் உயிரிழந்தார்; 11 பேர் காயமடைந்தனர்.