Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/குவைத் தீ விபத்தில் இறந்த இந்தியர்கள் 45 பேர்! தமிழக அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

குவைத் தீ விபத்தில் இறந்த இந்தியர்கள் 45 பேர்! தமிழக அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

குவைத் தீ விபத்தில் இறந்த இந்தியர்கள் 45 பேர்! தமிழக அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

குவைத் தீ விபத்தில் இறந்த இந்தியர்கள் 45 பேர்! தமிழக அரசு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

UPDATED : ஜூன் 14, 2024 10:27 AMADDED : ஜூன் 14, 2024 02:27 AM


Google News
Latest Tamil News
குவைத்: குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 49 பேரில், 45 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த ஏழு தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை மாநில அரசு அறிவித்துள்ளது.

மேற்காசிய நாடான குவைத்தின் மங்காப் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், என்.பி.டி.சி., என்ற கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 200 பேர் தங்கி உள்ளனர். இவர்கள் தமிழகம், கேரளா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

ஏழு மாடிகளை உடைய அந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

ஏழு தமிழர்கள்


இந்த விபத்தில் 49 பேர் பலியாகினர்; 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாலை என்பதால் பலியானவர்களில் பெரும்பாலானோர் துாக்கத்திலேயே மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள் என்றும், மூன்று பேர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

ஒருவரின் உடல் அடையாளம் காணப்படவில்லை. விபத்து குறித்து உரிய விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு துணை பிரதமர் ஷேக் பகத் அல் யூசுப் அல் சபா மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா அலி அல் யாயா ஆகியோர், 'இறந்தவர்கள் உடல்களை விரைவில் இந்தியா அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தனர்.

தமிழகம், கேரளா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த விபத்தில் பலியான நிலையில், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், தமிழகத்தின் துாத்துக்குடியைச் சேர்ந்த மாரியப்பன், 41; திருச்சி ராஜு, 54; கடலுார் மாவட்டம் சின்னதுரை, 42; சென்னை சிவசங்கர், 50; பேராவூரணி புனாப்ரிச்சர்ட் ராய், 28; ராமநாதபுரம் மாவட்டம் ராமு, 60; செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரிப், 37, என, ஏழு தமிழர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிவாரணம்


விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு, கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த ஏழு தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். காயமடைந்தோருக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.

விபத்து குறித்து, தமிழக அமைச்சர் மஸ்தான் கூறியதாவது:

அயலகத் துறை சார்பில், இந்திய துாதரக உதவியுடன் மருத்துவமனையில் இருப்போருக்கு, தமிழ் சங்கத்துடன் இணைந்து மருத்துவ உதவிக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களை அடையாளம் கண்டு, உறவினர்களிடம் ஒப்படைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, தரை தளத்தில் உள்ள செக்யூரிட்டி அறையில் ஏற்பட்ட மின்கசிவே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்த விபத்தில், கேரளாவைச் சேர்ந்த 24 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். மேலும் ஏழு பேர் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரண உதவியை கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர்களான யூசுப் அலி மற்றும் ரவி பிள்ளை ஆகியோர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் மற்றும் 2 லட்சம் ரூபாய் வழங்குவதாக முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.

இதன் வாயிலாக உயிரிழந்த கேரள தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு 12 லட்சம் ரூபாய் நிவாரணம் கிடைக்கும்.

குடும்பத்தினர் கதறல்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆதனுார் பகுதியை சேர்ந்த ஆனந்த மனோகரன், 60, என்ற விவசாயியின் மகன் புனாப் ரிச்சர்ட் ராய், 28. கடந்த 2019ம் ஆண்டு முதல் குவைத் நாட்டின் கட்டுமான நிறுவனத்தில் குவாலிட்டி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்ரகு இன்னும் திருமணம் ஆகவில்லை. சொந்த ஊரில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டு கிரகப்பிரவேசத்திற்காக கடந்த பிப்ரவரி மாதம் வந்து ஏப்ரலில் குவைத் திரும்பியவர் தீ விபத்தில் இறந்தார். திருச்சி மாவட்டம், நவல்பட்டு, அண்ணா நகரைச் சேர்ந்த எபினேசர் என்பவரது மகன் ராஜு, 54. இவரது மனைவி ராஜேஷ்வரி, மகள் மீனாட்சி கூறும் போது, 'ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக குவைத்தில் லாரி டிரைவராக பணி புரிந்து வந்தார். அவர், தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக என்.பி.டி.சி., நிர்வாகத்தினர் போன் மூலம் தகவல் அளித்தனர். ஆனால், மத்திய அரசோ அல்லது இந்திய துாதரகத்தில் இருந்தோ எந்த தகவலும் வரவில்லை' என்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா எட்டிவயல் அருகே தென்னவனுாரைச் சேர்ந்த தொழிலாளி ராமு, 60. குவைத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், 25 ஆண்டுகளாக பணிபுரிந்தார். தீ விபத்தில் இவரும் இறந்தார். இவருக்கு, மனைவி குருவம்மாள், மகள் சத்யா, மகன் சரவணன் உள்ளனர். நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் ராமு உடலை மீட்டு ஊருக்கு கொண்டுவர மாநில, மத்திய அரசுகள் உதவ வேண்டும் என கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரபாகரனிடம் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, கிருஷ்ணாபுரம், ஜாபர்பேக் தெருவைச் சேர்ந்த யாகூப் ஷெரீப் மகன் முகமது ஷெரிப், 36. இவர், ஐ.டி.ஐ., படித்து விட்டு கடந்த 12 ஆண்டுகளாக குவைத்தில், ஸ்டீல் நிறுவனம் ஒன்றில் போர்மேனாக வேலை செய்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு செஞ்சிக்கு வந்தவர், சிகிச்சை முடிந்து கடந்த மாதம் 29ம் தேதி மீண்டும் குவைத் சென்றார். தீ விபத்தில் சிக்கி இறந்துள்ளார். இவருக்கு அஷ்ரப்புன்னிசா, 29, என்ற மனைவியும், நுார்அப்சா, 9, நுார்ஷரிப்பா, 5, என்ற மகள்கள் உள்ளனர். முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை, 42, கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மூன்று ஆண்டிற்கு முன் சொந்த கிராமத்திற்கு வந்த அவர், மனைவியுடன் இங்கேயே தங்கிவிட்டார். அவர் வேலை செய்த குவைத் நிறுவனத்தில் இருந்து வந்த அழைப்பை ஏற்று 6 மாதத்திற்கு முன் அங்கு சென்று வேலை செய்து வந்தார். சில தினங்களுக்கு முன் போனில் பேசிய சின்னதுரை, இன்னும் இரண்டு வாரத்தில் ஊருக்கு வருவதாக கூறியிருந்த நிலையில் தீ விபத்தில் சிக்கி இறந்தார்.



தயார் நிலையில் விமானப் படை!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்காக தெற்கு குவைத்தின் மங்காப் பகுதியில் இந்திய விமானப் படை விமானம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் நாட்டுக்கு அனுப்பி வைக்கும் பணியை செய்வதற்காக, நம் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் குவைத்தில் தங்கியுள்ளார். மேலும், தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களுக்கான உதவிகளையும் அவர் மேற்பார்வையிட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us