விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., புறக்கணிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., புறக்கணிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., புறக்கணிப்பு
UPDATED : ஜூன் 15, 2024 05:03 PM
ADDED : ஜூன் 15, 2024 04:21 PM

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை, அ.தி.மு.க., புறக்கணிப்பதாக அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, ஜூலை 10ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இது தொடர்பாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இ.பி.எஸ்., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்,, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிப்பதாக அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறித்துள்ளார்.
பண பலம், படைபலம்
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசின் அமைச்சர்களும், தி.மு.க.,வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதோடு, பண பலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் கட்டவிழ்த்துவிட்டு மக்களை சுதந்திரமாக ஓட்டளிக்க விடமாட்டார்கள். தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது. இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
களத்தில் திமுக, நாம் தமிழர், பா.ம.க.,
தி.மு.க., வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ., கூட்டணியில் உள்ள பா.ம.க., போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளராக ஹோமியோபதி மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என, அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் பாமக ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன.