Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ விவசாயிகளுக்கு தனி அடையாள எண்; ஆவணங்கள் சமர்ப்பிக்க கெடு விதிப்பு

விவசாயிகளுக்கு தனி அடையாள எண்; ஆவணங்கள் சமர்ப்பிக்க கெடு விதிப்பு

விவசாயிகளுக்கு தனி அடையாள எண்; ஆவணங்கள் சமர்ப்பிக்க கெடு விதிப்பு

விவசாயிகளுக்கு தனி அடையாள எண்; ஆவணங்கள் சமர்ப்பிக்க கெடு விதிப்பு

ADDED : மார் 24, 2025 06:11 AM


Google News
Latest Tamil News
சென்னை : 'விவசாயிகள் தனி அடையாள எண் பெற, உரிய ஆவணங்களை வரும், 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்' என, வேளாண் துறை கெடு விதித்துள்ளது.

நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு, ஆதார் எண் போல, தனி அடையாள எண் வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசின், வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், நில விபரங்களுடன் இணைக்கப்பட்ட, விவசாயிகள் பதிவு, நிலம், பயிர் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைப்படி, தமிழகம் முழுதும் மின்னணு முறையில், விவசாயிகள் விபரம் சேகரிக்கப்படுகிறது.

இதற்காக, அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பணியை, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் உள்ளிட்ட பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சிட்டா, ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் போனுடன் சென்று, விபரங்களை பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, தனி அடையாள எண் வழங்கப்படுகிறது.

தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே, வரும் காலங்களில், மத்திய அரசு திட்டங்களின் கீழ் மானிய உதவிகள், பிரதமரின் விவசாய உதவித்தொகை, பயிர் கடன், கிஸான் கிரெடிட் கார்டு உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இப்பணியை முடித்தால், மத்திய அரசிடம் இருந்து, தமிழக வேளாண் துறைக்கு, 1,200 கோடி ரூபாய் கிடைக்கும்.

எனவே, இம்மாதம் 31ம் தேதிக்குள், விவசாயிகள் தங்கள் விபரங்களை தாக்கல் செய்து, தனி அடையாள எண் பெற்றுக் கொள்ள வேண்டும் என, வேளாண் துறை விவசாயிகளுக்கு கெடு விதித்துள்ளது. தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு, ஏப்ரல் முதல் மானிய உதவி, கடன் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படாது என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us