தேர்தல் முடிவுகளுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட மூவர் வழக்கு
தேர்தல் முடிவுகளுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட மூவர் வழக்கு
தேர்தல் முடிவுகளுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட மூவர் வழக்கு
ADDED : ஜூலை 18, 2024 01:52 PM

சென்னை: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நவாஸ்கனி, சொத்துமதிப்பை முறையாக காட்டவில்லை என்பதால், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி, சுயேட்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல், தேர்தல் வெற்றியை எதிர்த்து விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக.,வின் விஜயபிரபாகர், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.,வின் நயினார் நாகேந்திரனும் வழக்கு தொடர்ந்தனர்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிப்பெற்றது. வெற்றி குறித்து ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும் எனில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்குள் வழக்கு தொடர வேண்டும் என்ற விதி உள்ளது. அதன்படி, இன்று (ஜூலை 18) ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காங்., வேட்பாளர் நவாஸ்கனியின் வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், 'ராமநாதபுரம் தொகுதியில் வெற்றிப்பெற்ற நவாஸ்கனி, வேட்புமனுவில் சொத்துக்கணக்கை முறையாக காட்டவில்லை. எனவே, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்,' எனக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்., ''அதிமுக தொண்டர்கள் அனைவருமே கட்சி ஒன்றிணைய வேண்டும் என கேட்கின்றனர். கட்சியில் சேர்த்துக்கொள்ளுங்கள் எனக் கேட்கவில்லை; ஒன்றிணைக்கவே கோருகின்றனர்'' என்றார்.
திருநெல்வேலி, விருதுநகர்
திருநெல்வேலி தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து பா.ஜ., சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் வெற்றியை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.