லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியவர்கள்: நேற்றைய பட்டியல்!
லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியவர்கள்: நேற்றைய பட்டியல்!
லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கியவர்கள்: நேற்றைய பட்டியல்!
ADDED : ஜூன் 29, 2025 07:10 AM

திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே, குடியிருப்பு இடத்துக்கு பட்டா வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம கள உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் வாணியம்குளம் சேர்ந்தவர், தனது குடியிருப்பு இடத்துக்கு பட்டா கேட்டு, கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். பட்டா வழங்க வேண்டுமானால், ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என, கிராம கள உதவியாளர் கல்லூர் மாங்குறுச்சி பகுதியைச் சேர்ந்த பசல், 39, கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுத்து பட்டா வாங்க விரும்பாத புகார்தாரர், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறையின் அறிவுரையின்படி, அவர், நேற்று மாலை கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று பசலிடம் ரசாயனம் தடவிய பணத்தை வழங்கினார்.
லஞ்ச பணத்தை பெற்ற போது, டி.எஸ்.பி., ஷம்சுதீன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர், அவரை கையும் களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்ட பசலை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிராம உதவியாளர் ரூ.500 லஞ்சம்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நதிக்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர் பட்டா மாறுதலுக்காக வெம்பக்கோட்டை தாலுகாவில் விண்ணப்பித்திருந்தார். பட்டா மாறுதல் குறித்து கேட்க அவர் நதிக்குடி கிராம நிர்வாக அலுவலகம் சென்றார்.
அங்கு இருந்த கிராம உதவியாளர் முருகராஜ் ரூ. 2000 லஞ்சம் கேட்டு பின் ரூ. 500 வாங்கியதாக வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.வீடியோவில் கிராம உதவியாளர் ரூ. 2000 வேண்டும். அனைவரிடமும் ஒரே மாதிரி தான் பணம் வாங்கப்படுகிறது,'' என்கிறார்.
அதற்கு அந்த நபர்,''என்னிடம் தற்போது ரூ. 500 மட்டுமே உள்ளது,'' எனக்கூறி அதை கொடுக்க கிராம உதவியாளர் வாங்கி தன் சட்டை பையில் வைத்துக் கொள்கிறார். மீதி பணத்தை நாளை காலையில் வாங்கிக் கொள்கிறேன் எனக்கூறி விட்டு நடந்து சென்ற காட்சி பதிவாகியுள்ளது.
ரூ.4,500 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை சேர்ந்தவர் ஜெயராமன், 40; விவசாயி. கடந்த, 24ம் தேதி வாரிசு சான்றிதழுக்கு, ஆன்லைனில் விண்ணப்பித்தார். நேற்று முன்தினம் சாலிவரம் வி.ஏ.ஓ., லட்சுமிகாந்தன், 52, என்பவரிடம் வாரிசு சான்றிதழ் வழங்க கேட்டுள்ளார்.
அவர், 6,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால், வாரிசு சான்றிதழுக்கு பரிந்துரை செய்வதாக கூறியதால், 1,500 ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் கொடுத்தனுப்பிய ரசாயனம் தடவிய, 4,500 ரூபாயை, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த லட்சுமிகாந்தனிடம் நேற்று ஜெயராமன் வழங்கினார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், லட்சுமிகாந்தனை கைது செய்தனர்.