தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது: ஐகோர்ட் அதிருப்தி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது: ஐகோர்ட் அதிருப்தி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது: ஐகோர்ட் அதிருப்தி
ADDED : ஜூலை 29, 2024 05:38 PM

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற போது பணியில் இருந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினரின் சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று மாத காலம் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஜீரணிக்க முடியாது என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை, கடந்த 2018ல் ஆண்டு மூடப்பட்டது. அந்த ஆண்டு மே 22ல், ஆலையை மூட வலியுறுத்தி நடந்த போராட்டம் வன்முறையில் முடிந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில், 13 பேர் இறந்தனர்.
துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் தாமாக முன்வந்து எடுத்து விசாரிக்கப்பட்ட வழக்கு, அதே ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, இன்று (ஜூலை 29) நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சொத்து விவர அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று மாத காலம் அவகாசம் வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையினர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள் கூறியதாவது: துப்பாக்கிச் சூடு நடப்பதைக் கண்டு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதை ஏற்க முடியாது.
இந்த சம்பவத்தின் போது பணியில் இருந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் ஆகியோரின் சொத்து விவர அறிக்கையை மூன்று மாத காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஒருபோதும் ஜீரணிக்க முடியாது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை நியாயமான முறையில் நடைபெறுவதோடு, அரசு செயலாளர் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.