பழைய காற்றாலைகளை அகற்ற தமிழக மின் வாரியம் முடிவு
பழைய காற்றாலைகளை அகற்ற தமிழக மின் வாரியம் முடிவு
பழைய காற்றாலைகளை அகற்ற தமிழக மின் வாரியம் முடிவு
ADDED : மார் 19, 2025 07:11 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பழைய காற்றாலைகளை அகற்றிவிட்டு, அங்கு, 'ஹைபிரிட்' முறையில், பொது - தனியார் பங்கேற்பு வாயிலாக, காற்றாலையுடன், சூரியசக்தி மின் நிலையங்களையும் சேர்த்து அமைக்க மின் வாரியம் முடிவு செய்துஉள்ளது.
இங்குள்ள காற்றாலைகள் அமைக்கப்பட்டு நீண்ட காலமாகிவிட்டதால், தற்போது அவற்றின் செயல் திறன் மிகவும் மோசமாக உள்ளது. எனவே, பழைய காற்றாலைகளை அகற்றிவிட்டு, அங்கு 'ஹைபிரிட்' முறையில், அதாவது, ஒரே இடத்தில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, ஏற்கனவே பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில், பழைய காற்றாலை அமைந்துள்ள இடங்களில் தற்போது, 22 மெகா வாட் திறனில் காற்றாலை மற்றும், 18 மெகா வாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்களை, 'பி.பி.பி.,' எனப்படும் பொது - தனியார் கூட்டு பங்கேற்பின் வாயிலாக அமைக்க, மின் வாரிய இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து, அரசிடம் அனுமதி பெற உள்ளது.
இதன் வாயிலாக, மின் நிலையம் அமைப்பதற்கான இடத்தை, தனியார் நிறுவனத்திற்கு, மின் வாரியம் குத்தகைக்கு வழங்கும். அந்த இடத்தில், நிறுவனம் தன் செலவில் மின் நிலையம் அமைத்து, 25 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும்.அந்நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை, மின் வாரியம் கொள்முதல் செய்யும்.
இரு வகை மின்சாரத்திற்கும், ஒரு யூனிட்டிற்கு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து, அதை விட குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வரும் நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்படும். கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய, விரைவில் டெண்டர் கோரும் பணிகளில் மின் வாரியம் ஈடுபட்டுள்ளது.
![]() |
சிறப்பம்சம்:
* புதிய காற்றாலையுடன், சூரியசக்தி மின் நிலையத்தையும் சேர்த்து அமைக்க திட்டம்
* பகலில் சூரியசக்தி மின்சாரமும், சீசன் காலத்தில் காற்றாலை மின்சாரமும் கிடைக்கும்
*ஏற்கனவே மின் வழித்தடம் இருப்பதால், புதிய வழித்தடம் அமைக்க தேவையில்லை