கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை வழங்க நடவடிக்கை
கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை வழங்க நடவடிக்கை
கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை வழங்க நடவடிக்கை
ADDED : ஜூன் 25, 2025 11:57 PM
சென்னை:கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, 4,656 கால்நடை மருத்துவ முகாம்களில், இலவசமாக தாது உப்பு கலவை வழங்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மாடுகளின் எலும்புகள், பற்கள், மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவவும், அவற்றுக்கு தீவனத்தோடு சேர்த்து, மெக்னிசியம், கால்சியம், இரும்புத்தாது கலந்த, தாது உப்பு கலவை வழங்கப்படுகிறது. இதை, இலவசமாக வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து, கால்நடைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சினை மாடுகள், கிடேரி கன்றுகள், ஆடு போன்றவற்றுக்கு, தாது உப்பு கலவையை வழங்கலாம்.
இதனால், மாடுகள் சினை பிடிக்கும் கால இடைவெளி குறைவதோடு, ஆரோக்கியமான கன்று பிறக்க வழி வகுக்கும்.
மாட்டின் வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தி அதிகரிக்க உதவும். நடப்பு ஆண்டில், மாநிலம் முழுதும் 4,656 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இம்முகாமிற்கு வரும் கால்நடைகளுக்கு, தலா ஒரு கிலோ அளவுள்ள தாது உப்பு கலவை பாக்கெட்டுகள் வழங்கப்படும்.
இதற்காக, 1.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முகாமில் வழங்க, 1.97 லட்சம் கிலோ தாது உப்பு கலவை தயாராக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.