ADDED : செப் 11, 2025 02:01 AM
சென்னை:திருவண்ணாமலையில், வேத ஆகம தேவார ஆன்மிக கலாசார மாநாடு, வரும் 13 மற்றும் 14ம் தேதி நடக்க உள்ளது.
இது குறித்து, மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ் கூறியதாவது :
ஆன்மிக வழிபாட்டு முறையை, வருங்கால தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதை நோக்கமாக வைத்து, திருவண்ணாமலை சந்தைமேடு திடலில், இரண்டு நாட்கள் ஆன்மிக மாநாடு நடக்க உள்ளது.
மாநாட்டிற்கு, காஞ்சி காமகோடி பீடம், சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீ வில்லிபுத்துார் ஜீயர் சடகோப ராமானுஜர், ஸ்ரீ புரம் தங்க கோவில், வேலுார், ஸ்ரீ நாராயணிபீடம் சக்தி அம்மா, மேல் மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் செந்தில்குமார் அடிகளார்.
ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் அடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் தலைமை வகிக்க உள்ளனர்.
மாநாட்டின் முதல் நாள், தமிழகம் முழுதும் இருந்து, 1,008 சிவாச்சாரியார்கள் பங்கேற்கும், சிவபூஜை நடக்க உள்ளது. அதைத் தொடர்ந்து, ஆன்மிக கலாசார ஊர்வலம், மாலை ஆன்மிக மகான்களின் அருளுரை நடக்க உள்ளது.
மறுநாள், 14-ம் தேதி உலக கலாசார ஒற்றுமை தினமாக அனுசரிக்கப்பட்டு, காலை திருவிளக்கு பூஜை, மாலை இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் ஆன்மிக இசை கச்சேரியும் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.