'தப்பு தப்பா நடக்குது ; அப்பா என்ன செய்கிறார்' தி.மு.க., ஆட்சிக்கு தமிழிசை கேள்வி
'தப்பு தப்பா நடக்குது ; அப்பா என்ன செய்கிறார்' தி.மு.க., ஆட்சிக்கு தமிழிசை கேள்வி
'தப்பு தப்பா நடக்குது ; அப்பா என்ன செய்கிறார்' தி.மு.க., ஆட்சிக்கு தமிழிசை கேள்வி
ADDED : ஜூன் 13, 2025 01:15 AM

திருவேற்காடு:திருவள்ளூர் மாவட்ட பா.ஜ., சார்பில், மத்திய பா.ஜ., அரசின் 11 ஆண்டு சாதனை விளக்க கூட்டம், வேலப்பன் சாவடியில் நடந்தது. அதில், பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் கவர்னர் தமிழிசை கூறியதாவது:
உலக அரங்கில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகின் மிகப்பெரிய ரயில் பாலம் காஷ்மீரில் கட்டப்பட்டு உள்ளது. மத்திய பா.ஜ., ஆட்சியில், 10 கோடி இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது; 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 'ஜன்தன்' வங்கி கணக்கு 50 கோடி நபர்களுக்கு துவங்கப்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் 3 சதவீதமாக குறைந்துள்ளது. பெண்கள் வேலைவாய்ப்பு 7.50 கோடியாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தின் உட்கட்டமைப்பிற்கு இதுவரை 10 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளது. தமிழுக்கு எப்போதெல்லாம் மகுடம் சூட்ட முடியுமோ அப்போதெல்லாம் பிரதமர் மகுடம் சூட்டி வருகிறார். ஆனால், கீழடியின் தொன்மை மறைக்க பா.ஜ., முயற்சி செய்வது போல் ஒரு பொய்யான குற்றச்சாட்டை காங்கிரஸ், கம்யூ., தி.மு.க., கூறி வருகின்றன.
மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் தான், கீழடியின் தொன்மை குறித்த அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டது. முந்தைய காங்கிரஸ் ஆட்சி அதை கிடப்பில் போட்டது. மேலும், மாநில அகழ்வாராய்ச்சிக்கு முக்கியத்துவம் தர, பா.ஜ., ஆட்சியில் 66 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழின் தொன்மையை வெளிப்படுத்த தி.மு.க., அரசு எத்தனை அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது?
வேங்கை வயல் பிரச்சனை, திருநெல்வேலி மாவட்ட காங்., தலைவர் கொலை போன்றவற்றில், தி.மு.க., அரசுக்கு காங்கிரஸ் நெருக்கடி தரவில்லை. சாதி சான்றிதழ்களில் சாதி பெயருக்கு முன்னால் 'ஹிந்து' என்ற பெயரை நீக்குtதாக செய்தி வருகிறது. ஹிந்து என்ற வார்த்தையை மட்டும் நீக்க என்ன காரணம்? இதனால், அரசியலமைப்பு சட்டப்படி இட ஒதுக்கீட்டில் பிரச்னை ஏற்படும்.
அரசு நடத்தும் விடுதியில் 13 வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறார். தமிழகத்தில் குழந்தைகள் நல ஆணையம் இல்லை; மகளிர் ஆணையம் என்ன செய்கிறது? தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 'தப்பு தப்பா நடக்குது; அப்பா என்ன செய்கிறார்' என தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.