ஆவணங்களை ஆய்வு செய்ய செந்தில் பாலாஜிக்கு அனுமதி
ஆவணங்களை ஆய்வு செய்ய செந்தில் பாலாஜிக்கு அனுமதி
ஆவணங்களை ஆய்வு செய்ய செந்தில் பாலாஜிக்கு அனுமதி
ADDED : ஜன 05, 2024 01:49 AM
சென்னை:சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்தாண்டு ஜூன் 14ல் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆக. 12ல் 3000 பக்கங்கள் அடங்கிய அசல் ஆவணங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைதின் போது கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் அமலாக்கத்துறை வசம் உள்ள ஆவணங்களை வழங்கக்கோரி மாவட்ட முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி எஸ்.அல்லி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ''வழக்குக்கு தொடர்புடைய அனைத்து அசல் ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டு விட்டன'' என்றார்.
அசல் ஆவணங்கள் கோரிய மனுவை திரும்பப் பெறுவதாக செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்று அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அசல் ஆவணங்களை நீதிமன்ற பணி நேரத்தில் 'பெஞ்ச் கிளார்க்' முன்னிலையில் ஆய்வு செய்ய செந்தில் பாலாஜி தரப்புக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
காவல் நீட்டிப்பு
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்த நிலையில் சென்னை புழல் சிறையில் உள்ள அவரை நீதிபதி எஸ்.அல்லி முன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜர்படுத்தினர். பின் நீதிமன்ற காவலை ஜன.11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.