'உடனடி நிவாரணமாக ரூ.2,000 கோடி தரவேண்டும்'
'உடனடி நிவாரணமாக ரூ.2,000 கோடி தரவேண்டும்'
'உடனடி நிவாரணமாக ரூ.2,000 கோடி தரவேண்டும்'
ADDED : ஜன 05, 2024 10:41 PM
சென்னை:சென்னை தலைமை செயலகத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று அளித்த பேட்டி:
தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி குறித்து மத்திய நிதி அமைச்சர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதற்கு, தமிழக அரசு சார்பில் விளக்கம் தர வேண்டியது கடமை.
கடந்த 2014 முதல் 2023 வரை, மத்திய அரசு 4.75 லட்சம் கோடி வழங்கி உள்ளது. இதில், 2.47 லட்சம் கோடி மத்திய வரி பகிர்வு; 2.28 லட்சம் கோடி மானியம் மற்றும் உதவித்தொகை.
ஆனால், தமிழகத்தில் இருந்து நேரடி வரியாக, 6.23 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வசூலித்துள்ளது. அது வசூலிக்கும் மறைமுக வரி குறித்து, நமக்கு எந்த தகவலும் தருவதில்லை
தமிழகத்தில் இருந்து பெறும் ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும், மத்திய அரசிடம் இருந்து, 29 பைசா மட்டுமே நமக்கு திரும்ப கிடைக்கிறது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில், இந்த விகிதாச்சாரம் முற்றிலும் மாறுபட்டுள்ளது.
உத்தர பிரதேசம் 2.23 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசுக்கு வரியாக கொடுத்துள்ளது. ஆனால் மத்திய அரசிடம் இருந்து, 15.35 லட்சம் கோடி பெற்றுள்ளது
தமிழகத்தில் இருந்து 2011-12ல், மத்திய அரசின் தனிப்பட்ட வருவாய், 10.4 சதவீதமாக இருந்தது. இது, 2021 - 22ல், 28.1 சதவீதமாக கூடியுள்ளது. ஐந்து ஆண்டு புள்ளி விபரங்களை பார்க்கும் போது, தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி., வரி பகிர்வு குறைந்துள்ளது.
தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை, 20,000 கோடி ரூபாயாக உள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, 63,245 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதில், 50 சதவீதத்தை, மத்திய அரசு தர வேண்டும்.
அதேநேரம், மஹாராஷ்டிராவுக்கு 28,493 கோடி, மேற்கு வங்கத் துக்கு 13,109 கோடி, குஜராத்துக்கு 12,867 கோடி வழங்கியுள்ளது. தமிழகத்துக்கு இதுவரை 3,723 கோடி தான் தந்துள்ளது.
தமிழகத்துக்கு 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு நிதியை வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் கூறுகிறார். இந்த காலகட்டத்தில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பண மதிப்பு குறைவு ஆகியவற்றை கணக்கிடவில்லை.
'மிக்ஜாம்' புயலால் பாதித்த மக்களுக்கு, 1,486 கோடியும், வெள்ளம் பாதித்த தென்மாவட்ட மக்களுக்கு, 546 கோடியும் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தின் கடுமையான நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, உடனடியாக 2,000 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.