Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ முத்துக்குமார சுவாமி கோவிலின் ரூ.12 கோடி நிலம் கபளீகரம்

முத்துக்குமார சுவாமி கோவிலின் ரூ.12 கோடி நிலம் கபளீகரம்

முத்துக்குமார சுவாமி கோவிலின் ரூ.12 கோடி நிலம் கபளீகரம்

முத்துக்குமார சுவாமி கோவிலின் ரூ.12 கோடி நிலம் கபளீகரம்

UPDATED : மே 19, 2025 07:09 AMADDED : மே 19, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
சென்னை:பாரிமுனை கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, எருக்கஞ்சேரியில் உள்ள, 12 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை கபளீகரம் செய்து, இரண்டு மாடிகளுடன் வீடு கட்டும் பணி ஜரூராக நடந்து வருகிறது. தடுக்க வேண்டிய அரசு துறைகள் வேடிக்கை பார்த்து வருகின்றன.

சென்னை பாரிமுனையில் உள்ளது, பழமையான கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில்.

இந்த கோவிலுக்கு, 100 ஆண்டுகளுக்கு முன், ஜமின்தார்கள், வாரிசு இல்லாத செல்வந்தர்கள், ஆன்மிகவாதிகள் என, பல தரப்பினரும் தானமாக, காணிக்கையாக அளித்த பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.

ஆக்கிரமிப்பு


அவற்றை முறையாகபராமரிக்காமலும், பத்திரப்பதிவு செய்யாமல் விட்டதாலும், பல இடங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளன.

கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, பாரதிதாசன் தெருவில் கோவிலுக்கு சொந்தமான, 8,000 சதுரடி நிலம், ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. அங்கு தரைத்தளம், முதல் தளத்துடன் வீடு கட்டும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து புகார் தெரிவித்தும், கோவில் நிர்வாகம் ஆக்கிரமிப்பை தடுக்காமல் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

எருக்கஞ்சேரியில், முத்துக்குமார சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 12 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்து, அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்துவ மதபோதகர் ஒருவர், தரைத்தளம் மற்றும் முதல்தளத்துடன் வீடு கட்டி வருகிறார்.

இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில், கடந்த ஜன., 28ல் படத்துடன் செய்தி வெளியானது. ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். சில தினங்கள் மட்டும் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன.

பின், தரைத்தளம், முதல் தளம் என, மாநகராட்சி அனுமதியின்றி கட்டுமான பணி துரிதமாக நடந்து வருகிறது. இதற்கு, அப்பகுதியில் உள்ள அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் துணை போகின்றனர்.

நிர்வாகம் அலட்சியம்


மேலும், 'இது கோவில் இடம்; அத்துமீறுவோர் தண்டிக்கப்படுவர்' என்ற அறிவிப்பு பலகையைக்கூட, கோவில் நிர்வாகம் வைக்கவில்லை. இதன் வாயிலாக, ஆக்கிரமிப்புக்கு, கோவில் நிர்வாகம் துணை போவது தெரிகிறது. ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சி எடுத்து, கோவில் நிலத்தை மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவில் நிர்வாகிகள் புலம்பல்


முத்துக்குமார சுவாமி கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:எருக்கஞ்சேரியில், முத்துக்குமார சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு, வாடகை செலுத்தாமல் உள்ள 23 மனை குடியிருப்புகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.கொடுங்கையூர், பாரதிதாசன் தெருவில் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், குடியிருப்புகள் உள்ளன.
இதை, ஏ.ஐ.பி.ராஜ் மற்றும் அவரது மனைவி கலைசெல்வி ஆகியோர், கோவில் மற்றும் மாநகராட்சி அனுமதியின்றி, பழைய கட்டடத்தை இடித்து, புதிதாக கான்கிரீட் கட்டடம் கட்டி வருவதாக புகார் வந்தது.இடத்தை ஆய்வு செய்தோம். கோவில் இடம், 'ஓடை புறம்போக்கு' என்று குறிப்பிடப்பட்டு உள்ளதை மேற்கோள்காட்டி ஆக்கிரமிப்பாளர்கள், மாநகராட்சி அனுமதியின்றி, தரைத்தளம், முதல்தளத்துடன் கட்டுமான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
கள ஆய்வு செய்து, பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தரும்படி, கோவில் நிர்வாகம் சார்பில், பெரம்பூர் தாசில்தாருக்கு கடிதம் தரப்பட்டுள்ளது. கட்டுமான பணியை நிறுத்தக்கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காவல் துறையிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கட்டுமான பணிக்கு தடை விதிக்கக்கோரி, சென்னை மாநகராட்சிக்கும் புகார் தரப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் கூடாது என, கோவில் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
ஆனால், ரவுடி கும்பல், கோவில் வைக்கும் அறிவிப்பு பலகைகளை அகற்றி விடுகிறது. கள ஆய்வுக்கு செல்லும் கோவில் நிர்வாகத்தினருடன், ரவுடிகள் தகராறு செய்கின்றனர். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை.அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் பாதுகாப்பு இருந்தால் மட்டுமே, ஆக்கிரமிப்பை அகற்ற முடியும். தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us