பொன்முடி மீதான குவாரி வழக்கு ஒத்திவைப்பு
பொன்முடி மீதான குவாரி வழக்கு ஒத்திவைப்பு
பொன்முடி மீதான குவாரி வழக்கு ஒத்திவைப்பு
ADDED : செப் 10, 2025 08:56 AM

விழுப்புரம்; முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் 23ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை அரசு செம்மண் குவாரியில் விதிமீறி செம்மண் எடுத்து அரசுக்கு ரூ. 28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி மற்றும் ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாதன் ஆகியோர் மீது, கடந்த 2012ம் ஆண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் இதுவரையில் 54 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். நேற்று நடந்த விசாரணையில், வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அப்போதைய மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யான ஓய்வுபெற்ற விஜயராகவன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி மணிமொழி உத்தரவிட்டார்.