Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கடல் அன்னைக்கு நன்றி கூறும் சப்த கன்னிகள் பொங்கல் விழா

கடல் அன்னைக்கு நன்றி கூறும் சப்த கன்னிகள் பொங்கல் விழா

கடல் அன்னைக்கு நன்றி கூறும் சப்த கன்னிகள் பொங்கல் விழா

கடல் அன்னைக்கு நன்றி கூறும் சப்த கன்னிகள் பொங்கல் விழா

ADDED : ஜன 16, 2024 01:23 AM


Google News
Latest Tamil News
ஆர்.எஸ்.மங்கலம் : கடல் தொழில் சிறக்கவும், கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணையில் சப்த கன்னிகள் பொங்கல் விழா நடைபெற்றது.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணை மீனவர் கிராமத்தில் கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக கடல் வளம் சிறக்க சப்த கன்னிகள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதற்காக கிராமத்தில் ஏழு சிறுமிகள் (சப்த கன்னிகள்) தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பொங்கல் வைக்கும் நடைமுறைகளை பெரியவர்கள் மூலம் கற்றுக் கொடுத்தனர். நேற்று காலை 9:00 மணிக்கு அந்த சிறுமிகள் கரகம் சுமந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

ரண பத்திரகாளி அம்மன் கோயில் முன்பு அவர்கள் ஏழு பானைகளில் பொங்கல் வைத்தனர். பின் மீனவர்கள் பின் தொடர மேள தாளங்கள் முழங்க கோயில் முன்பு சிறிய படகில் சப்த கன்னிகளால் வைக்கப்பட்ட பொங்கல் மற்றும் பூஜை பொருட்களை வைத்தனர். கிராம தலைவர் ராஜதுரை தலைமை வகித்தார்.

படகில் நெய் தீபம் ஏற்றி மீனவர்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து கிராமப் பெரியவர்கள் பூஜை பொருட்களுடன் கூடிய சிறிய படகை சுமந்து கடலுக்கு சென்றனர். சப்த கன்னிகள் கரகம் சுமந்தபடி கடற்கரைக்கு சென்றனர். பின்னர் பூஜை பொருட்களுடன் கூடிய சிறிய படகை சப்த கன்னிகள் மூலம் கடல் நீரில் விட்டனர்.

வாழ்வாதாரம் வழங்கும் கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த விழா கொண்டாடுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us