நகர் பகுதிகளுடன் கிராம ஊராட்சிகளை இணைத்தால் மத்திய அரசு நிதி குறையும் அரசுக்கு பழனிசாமி எச்சரிக்கை
நகர் பகுதிகளுடன் கிராம ஊராட்சிகளை இணைத்தால் மத்திய அரசு நிதி குறையும் அரசுக்கு பழனிசாமி எச்சரிக்கை
நகர் பகுதிகளுடன் கிராம ஊராட்சிகளை இணைத்தால் மத்திய அரசு நிதி குறையும் அரசுக்கு பழனிசாமி எச்சரிக்கை
ADDED : ஜன 12, 2024 12:14 AM
சென்னை:'தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளை, நகரப் பகுதிகளுடன் இணைப்பதற்கு முன்பு, அப்பகுதி மக்களின் கருத்தை அறிய வேண்டும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம், வரும் டிசம்பரில் முடிவடைய உள்ளது. அதற்கு பின், எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கலாம் என கருத்துரு அனுப்பும்படி, ஊராட்சி உதவி இயக்குனர்களுக்கு, அரசு கடிதம் எழுதி உள்ளது.
பொதுவாக ஒவ்வொரு ஊராட்சிக்கும், அங்குள்ள மக்கள் தொகை அடிப்படையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்கிறது. பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு, மத்திய நிதி கமிஷன் நிதி, 100 நாள் வேலை திட்ட நிதி கிடையாது.
பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், 100 சதவீத மானியத்தில் கிராமப்புற மக்களுக்கு, சொந்த வீடு கட்ட நிதியுதவி அளிக்கப்படுகிறது. 'துாய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், கழிப்பறை கட்ட, 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு, முழு மானியம் வழங்கப்படுவதில்லை.
பிரதமர் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 100 சதவீதம் மத்திய நிதியில், கிராம சாலைகள் அமைக்கப்படுகின்றன. ஒரு சில மலை கிராமங்களுக்கு, 8 கி.மீ., துாரம் வரை, சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. மாநில அரசு நிதியில், இது சாத்தியமில்லை.
மத்திய அரசு நிதி இல்லாமல், மாநில அரசு நிதியில், நகர் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்பாடு செய்வதில், பல்வேறு சிரமங்கள் உள்ளன. எனவே, தற்போதுள்ள ஊராட்சிகளை, நகர் பகுதிகளுடன் இணைப்பதால், ஊராட்சிகளுக்கு மத்திய அரசு நேரடியாக வழங்கும் நிதி நின்று போகும்.
புதிதாக இணைக்கப்பட்ட ஊராட்சிகளில், நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயரும். வீட்டு வரி, சொத்து வரி பல மடங்கு உயரும். புதிய வீடு கட்ட அனுமதி பெறுவதற்கான செலவு அதிகரிக்கும். எனவே, ஊராட்சிகளை நகர் பகுதிகளுடன் இணைத்தால், மத்திய அரசு நிதி பெருமளவு குறையக்கூடிய அபாயம் உள்ளது.
உதாரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில்தான், மாநிலத்திலேயே அதிக அளவாக, 53 பேரூராட்சிகள் உள்ளன. இந்நிலையில், 25 ஊராட்சிகளை, 20 பேரூராட்சிகளுடன் இணைத்துக் கொள்ள, பேரூராட்சிகள் இயக்குனரகம் கருத்துரு அனுப்பி உள்ளது.
இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில், ஊராட்சிகள் எண்ணிக்கை குறையும். மத்திய அரசின் நிதி பங்களிப்பு பெருமளவு குறையும். அந்த 25 ஊராட்சிகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்படும்.
எனவே, தமிழகம் முழுதும் ஊராட்சிகளை நகரப் பகுதிகளுடன் இணைப்பதற்கு முன்பு, அந்தந்த ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், அரசியல் கட்சிகள், நலச் சங்கங்கள் உள்ளிட்டோரிடம், கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டும்; அவர்கள் சம்மதத்தை பெற்று, இத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.