ADDED : ஜன 29, 2024 12:49 AM

ஜனவரி 29, 1980
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில், 1920ல் பிறந்தவர், எஸ்.வி.சுப்பையா.
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், செங்கோட்டை ஆனந்த சக்திவேல் பரமானந்த பாய்ஸ் கம்பெனியில், சிறுவர் பாத்திரங்களிலும், பெண் வேடங்களிலும் நடித்தார். இளைஞனானதும், பால சண்முகானந்தா சபா, சக்தி நாடக சபாக்களில் நடித்தார்.
எஸ்.டி.சுந்தரம் எழுதிய, 'கவியின் கனவு' நாடகத்தில், மகாகவி ஆனந்தனாக நடித்து புகழ்பெற்றார். நாகையில் நடந்த இந்த நாடகத்துக்காக, சேலத்தில் இருந்து சிறப்பு ரயில் கூட இயக்கப்பட்டது. பிரகதி பிக்சர்ஸ் தயாரித்த, விஜயலட்சுமி திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து, கஞ்சன், கர்ணன், காலம் மாறிப்போச்சு உள்ளிட்ட படங்களில் நடித்தார். கப்பலோட்டிய தமிழன் படத்தில் இவர் ஏற்ற பாரதியார் வேடம், ரசிகர்களை உணர்ச்சிப் பிழம்பாக்கியது.
சிறந்த வாசகரான இவர், எழுத்தாளர் ஜெயகாந்தனின் ரசிகர். அவரின், 'கைவிலங்கு' குறுநாவலின் உரிமையைப் பெற்ற இவர், காவல் தெய்வம் என்ற பெயரில் படமாக தயாரித்தார். அதில், இவரின் நட்புக்காக, சிவாஜி ஊதியம் வாங்காமல் கவுரவ வேடம் ஏற்றார். விவசாய பிரியரான இவர், சென்னை காரனோடையில் பண்ணை வைத்து, விவசாயம் செய்தார். இவர் தன், 60வது வயதில், 1980ல் இதே நாளில் மறைந்தார்.
'பாரதி'யை திரையில் காட்டிய, எஸ்.வி.எஸ்., மறைந்த தினம் இன்று!