பெண் மாவோயிஸ்டை பிடிக்க என்.ஐ.ஏ., தேடுதல் வேட்டை
பெண் மாவோயிஸ்டை பிடிக்க என்.ஐ.ஏ., தேடுதல் வேட்டை
பெண் மாவோயிஸ்டை பிடிக்க என்.ஐ.ஏ., தேடுதல் வேட்டை
ADDED : மார் 25, 2025 04:13 AM

சென்னை: பெண் மாவோயிஸ்டை தேடும் பணியில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2016ல், கேரள மாநிலம் எடக்கரை காவல் நிலைய எல்லையில், மாவோயிஸ்ட்கள் 20 பேர் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
சமீபத்தில் சென்னை மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்களான சின்ன கார்த்திக், சந்தோஷ்குமார் ஆகியோரை, தமிழக 'கியூ' பிரிவு போலீசார் கைது செய்து, என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்களின் கூட்டாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது.
இது குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
ராமநாதபுரம், கோவை, வேலுார், திருவண்ணாமலை, தேனி, ராணிப்பேட்டை, விருதுநகர், திருநெல்வேலி பகுதிகளைச் சேர்ந்த மாவோயிஸ்ட்கள், கேரள மாநிலத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றுஉள்ளனர்.
சில தினங்களுக்கு முன், இவர்களின் கூட்டாளிகளை, தமிழக - கேரள எல்லையில் தங்கியிருந்த பெண் மாவோயிஸ்ட் ஒருவர் சந்தித்துள்ளார். அவர்கள், கேரள மாநிலம் நிலம்பூர் பகுதியில், மீண்டும் ஆயுதப் பயிற்சி எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதை முறியடிக்கும் விதமாக தேடுதல் நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.