Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சிறப்பு கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் துரைமுருகனுக்கு விலக்கு

சிறப்பு கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் துரைமுருகனுக்கு விலக்கு

சிறப்பு கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் துரைமுருகனுக்கு விலக்கு

சிறப்பு கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் துரைமுருகனுக்கு விலக்கு

ADDED : செப் 11, 2025 01:54 AM


Google News
சென்னை:சொத்து குவிப்பு வழக்கில், சென்னை ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில், நேரில் ஆஜராவதில் இருந்து, அமைச்சர் துரைமுருகனுக்கு விலக்கு அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2006 - -11ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சியில், துரைமுருகன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, 2007 முதல் 2009 வரையிலான கால கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக, 1.40 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, 2011ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்தது.

அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் இருந்து, இருவரையும் விடுவித்து, வேலுார் சிறப்பு நீதிமன்றம் 2017ல் உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த, வேலுார் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

இந்த வழக்கை, சென்னை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், மீண்டும் விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கின் விசாரணையை, வேலுார் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி, அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், துரைமுருகனின் கோரிக்கையை நிராகரித்தும், குற்றச்சாட்டு பதிவுக்கு ஆஜராகாததால் துரைமுருகன், அவரது மனைவிக்கு எதிராக பிடி வாரன்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், துரைமுருகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது துரைமுருகன் தரப்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன், ரிச்சர்டு வில்சன் ஆஜராகி, ''கடந்த 2017ம் ஆண்டு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், 2019ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது,'' என்றனர்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, இந்த மனுவுக்கு, லஞ்ச ஒழிப்பு துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணைக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து, துரைமுருகன், அவரது மனைவி ஆகியோருக்கு விலக்கு அளித்து, விசாரணையை தள்ளி வைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us