''வெளியேற்றிய அதிமுக எம்எல்ஏ.,க்களை அனுமதியுங்க'': சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த முதல்வர்
''வெளியேற்றிய அதிமுக எம்எல்ஏ.,க்களை அனுமதியுங்க'': சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த முதல்வர்
''வெளியேற்றிய அதிமுக எம்எல்ஏ.,க்களை அனுமதியுங்க'': சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்த முதல்வர்
ADDED : ஜூன் 21, 2024 12:03 PM

சென்னை: சட்டசபையில் அமளியில் ஈடுபட்டதற்காக வெளியேற்றிய அதிமுக எம்எல்ஏ.,க்களை மீண்டும் விவாதங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, அதிமுக எம்எல்ஏ.,க்கள் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பலரும் உயிரிழந்தது தொடர்பாக சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை குண்டுக்கட்டாக வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கடலூரில் 2001, டிசம்பரில் கள்ளச்சாராயத்தால் 52 பேர் உயிரிழந்து, 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர். பாமக எம்எல்ஏ.,க்கள் உள்ளிட்ட பலரும் இதுகுறித்து சட்டசபையில் பேசியிருந்தனர். தற்போது கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் எனது கவனத்திற்கு வந்த உடன் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறேன்.
2001ல் சரியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை; ஆனால் இப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அதுபற்றி பேசிவிடுவார்களோ என பயந்து, எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்க்கட்சியினரும் பங்கேற்க வேண்டும். எனவே, அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதான எதிர்க்கட்சியினரை கேள்வி நேரம் முடிந்ததும் அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
அதிமுக எம்எல்ஏ.,க்களை மீண்டும் அவையில் விவாதத்திற்கு அனுமதிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை ஏற்று, சபாநாயகர் அப்பாவு அதிமுக எம்எல்ஏ.,க்களை விவாதங்களில் பங்கேற்க அனுமதித்தார். ஆனால், சபாநாயகரின் அழைப்பை அதிமுக.,வினர் ஏற்க மறுத்து இன்றைய விவாதத்தை புறக்கணி்ததனர்.