கள்ளச்சாராயத்தில் பீங்கான் தொழில் வேதிப்பொருள் கலப்பா?
கள்ளச்சாராயத்தில் பீங்கான் தொழில் வேதிப்பொருள் கலப்பா?
கள்ளச்சாராயத்தில் பீங்கான் தொழில் வேதிப்பொருள் கலப்பா?
ADDED : ஜூன் 24, 2024 06:32 AM

விருத்தாசலம்: கள்ளக்குறிச்சி அடுத்த கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த, 57பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 156 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளச்சாராயம் விற்பனை செய்த கண்ணுக்குட்டி கோவிந்தராஜ் என்பவரை கைது செய்து விசாரித்ததில், அவர்,புதுச்சேரி மடுகரையை சேர்ந்த மாதேஷ் என்பவரிடம் கள்ளச்சாராயத்திற்கு தேவையான வேதிப்பொருளை வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, மாதேஷை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கடலுார் மாவட்டம் விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில், செராமிக்கம்பெனி நடத்தி வரும்,எஜமான் நகர் ஜோதிமணி, 39, வீரபாண்டியன் தெருவை சேர்ந்தகேசவகுமார், 39, ஆகியோருக்கும், சட்டவிரோதமாக எம்.டி.ஓ., மற்றும் ஓலிக் ஆயில் விற்பனை செய்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து, கள்ளக்குறிச்சி போலீசார், ஜோதிமணி, கேசவகுமார் இருவரையும் நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர். இருவரும், மாதேஷிடம் சட்ட விரோதமாக ஆயில் வாங்கியதை ஒப்புக்கொண்டனர்.
![]() |
மார்ச் முதல் தற்போது வரை 25 பேரல்கள் கொள்முதல் செய்துள்ளனர். இதையடுத்து, ஜோதிமணி, கேசவகுமார் இருவரையும் விருத்தாசலம் மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர். சட்டவிரோதமாக ஆயில் வாங்கியதாக அவர்கள் மீது விருத்தாசலம் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 320 லிட்டர் எம்.டி.ஓ., ஆயிலை பறிமுதல் செய்ததுடன், அவர்களிடம் இந்த வேதிப்பொருள் கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு விற்கப்பட்டதா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கள்ளச்சாராயம் மரணங்கள் எதிரொலியாக, கள்ளக்குறிச்சி மாவட்ட கலால் உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பதில், காவல் துறையினருக்கு மட்டுமின்றி, வருவாய் துறையினருக்கும் பங்கு உண்டு.
அவர்கள், டாஸ்மாக் அருகே அனுமதியின்றி செயல்படும் பார்கள், டாஸ்மாக் மது விற்பனை விபரங்கள், கள்ளச்சாராயம் விற்பனை பாதிப்புகள் போன்ற குற்ற செயல்கள் தொடர்பான தகவல்களை வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் வாயிலாக சேகரித்து, மாதம் தோறும் கலெக்டரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இதன் வாயிலாக கலெக்டர் தலைமையில் நடக்கும் மாவட்ட சட்டம் - ஒழுங்கு தொடர்பான அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில், கள்ளச்சாராயம் விற்பனை குறித்து காவல் துறை அதிகாரிகளை எச்சரித்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
ஆனால், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக வருவாய் துறையின் கலால் அதிகாரிகள், அலுவலர்கள் முன்கூட்டியே எவ்வித தகவலும் அளிக்காமல் கோட்டை விட்டனர். இந்த விவகாரத்தில், காவல் துறையினர் மீது 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
தற்போது மாவட்ட கலால் உதவி ஆணையர் சக்திவேல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை ஆணையர் ஜெயகாந்தன் நேற்று முன்தினம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.