'உறுப்பு மாற்று சிகிச்சைக்கான ஒப்புதலை விசாரித்தால் பல உண்மை வெளிவரும்'
'உறுப்பு மாற்று சிகிச்சைக்கான ஒப்புதலை விசாரித்தால் பல உண்மை வெளிவரும்'
'உறுப்பு மாற்று சிகிச்சைக்கான ஒப்புதலை விசாரித்தால் பல உண்மை வெளிவரும்'
ADDED : ஜூன் 01, 2024 05:31 AM

சென்னை : 'உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, மாநில குழு இதுவரை அளித்த ஒப்புதல் குறித்து விசாரித்தால், பல உண்மைகள் வெளி வரும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ரயில்வேயில், மின் உதவியாளராக பணிபுரிந்து வரும் ராஜ்குமார், 30, என்பவர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டார். இவருக்கு உறவினர் அல்லாத ராதிகா என்பவர் சிறுநீரகம் தானம் தர முன்வந்தார். இருவரும் மாநில அளவிலான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதியளிக்கும் குழுவிடம் ஒப்புதல் கோரி விண்ணப்பித்தனர்.
ஆனால், தகவல்கள் சரியில்லை எனக்கூறி, விண்ணப்பத்தை நிராகரித்து குழு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜ்குமார் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: பல பெரிய தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளுக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் அளித்த மாநில குழு, சிறிய மருத்துவமனைகள் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை நிறுத்தி வைத்தும், நிராகரித்தும் உள்ளது.
இது தான் முதலாளித்துவத்தின் வழி. தொழில் செய்பவர்கள் நடந்து கொள்ளும் முறை இதுதான். தொழிலில், சம்பந்தப்பட்ட நபர் அல்லது நிறுவனங்கள் வெற்றியை பெற முனைகின்றன; அதை பெறுவதில் ஒருவருக்கொருவர் தீங்கு விளைவிப்பதை கண்டு கொள்ள மாட்டார்கள்.
மருத்துவம் என்பது பெரும் வணிகம். துன்பம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் போது, மருத்துவமனை மற்றும் நோயாளியின் நிலையை பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும்.
மேலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் கோரும் விண்ணப்பங்களை, மாநில குழு ஒரே மாதிரியாக அணுக வேண்டும்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, இதுவரை மாநில குழு அளித்த ஒப்புதல் குறித்து புலன் விசாரணை நடத்தினால், பல பெரிய மருத்துவ மனைகளுக்கு சாதகமாக செயல்பட்டது உள்ளிட்ட பல உண்மைகள் வெளிவரும்.
இந்த வழக்கில், ராஜ்குமாரின் விண்ணப்பத்தை நிராகரித்து, மாநில குழு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவரின் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து, மாநில குழு, மூன்று வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.