ADDED : செப் 10, 2025 02:09 AM

சென்னை:கோவை, நீலகிரி உள்ளிட்ட, 12 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மதுரை மாவட்டம், எழுமலை பகுதியில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு, 6; சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், விழுப்புரம் மாவட்டம் சூரப்பட்டு, பெரம்பலுார் ஆகிய இடங்களில் தலா, 5 செ.மீ., மழை பெய்துஉள்ளது.
தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் அநேக இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், இடி மின்னல் மற்றும் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 15 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
கோவை, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில், நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில் இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.