Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சென்னையில் என்கவுன்டர்: சந்தேகம் எழுப்பும் தலைவர்கள்

சென்னையில் என்கவுன்டர்: சந்தேகம் எழுப்பும் தலைவர்கள்

சென்னையில் என்கவுன்டர்: சந்தேகம் எழுப்பும் தலைவர்கள்

சென்னையில் என்கவுன்டர்: சந்தேகம் எழுப்பும் தலைவர்கள்

UPDATED : ஜூலை 14, 2024 04:19 PMADDED : ஜூலை 14, 2024 02:32 PM


Google News
Latest Tamil News
சென்னை: சென்னையில் இன்று போலீசார் நடத்திய என்கவுன்டர் தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள் சந்தேகம் கிளப்பி உள்ளனர். 'பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திமுக நிர்வாகிகள் அருள், கலை மா ஶ்ரீனிவாசன் மற்றும் சதீஷ் சிக்கியுள்ளனர். எப்போது வாய் திறப்பார் முதல்வர் ஸ்டாலின்' என தமிழக பா.ஜ., தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார்.



பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:Image 1293713

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் என்பவரை, இன்று தமிழக போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். திருவேங்கடம், தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்துள்ளனர். கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டு இருப்பதால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டதை, போலீஸ் உயர் அதிகாரிகள் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும், ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான விசாரணை, நியாயமாகவும், துரிதமாகவும் நடக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

இபிஎஸ்


Image 1293714

அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியதாவது: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த கொலைக்குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். எதற்காக அவர் அவசரமாக என்கவுன்டர் செய்யப்பட்டார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலை வழக்கில் சந்தேகம் இருப்பதாக ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் கூறிவரும் நிலையில், இந்த என்கவுன்டர் நடந்துள்ளது மேலும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

சீமான்


Image 1293715

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில்: ரவுடி திருவேங்கடம் மீதான என்கவுன்டர் திமுக அரசின் நாடகம். திருவேங்கடம் சுட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கான நாடகம். போலீசார் பாதுகாப்பில் இருந்த விசாரணை கைதி சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி?

உண்மையை மறைக்க போலீசார் போலி துப்பாக்கிச்சூடு நடத்தியது பல முறை மெய்ப்பிக்கப்பட்டு உள்ளது. ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல என சந்தேகம் எழுகிறது. இந்நிகழ்வு தமிழக போலீஸ் எந்தளவுக்கு திறனற்றதாகி உள்ளது என்பதையும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக சீரழிந்துள்ளது என்பதையும் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

என்கவுன்டர் செய்ததில் சதி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டதில் சதி உள்ளது. என்கவுன்டர் தொடர்பாக போலீசார் சொல்லும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை. விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us