Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாத திமுக அரசு: அண்ணாமலை

தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாத திமுக அரசு: அண்ணாமலை

தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாத திமுக அரசு: அண்ணாமலை

தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாத திமுக அரசு: அண்ணாமலை

ADDED : செப் 02, 2025 03:44 PM


Google News
Latest Tamil News
சென்னை: '' உயிர்ப்பலி ஏற்படும்போதும், ஏதேதோ கதைகள் சொல்லி மடைமாற்றுவதில்தான் குறியாக இருக்கிறதே தவிர, தவற்றை ஒப்புக்கொண்டு, தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாமல் இருக்கிறது திமுக அரசு,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை, சூளைமேடு வீரபாண்டியன் தெருவில் வசித்து வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இன்று( செப்.,02) காலை மழைநீர் வடிகால் நடைபாதையில் நடந்து சென்ற போது தவறி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளைமேடு போலீசார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில், மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் தொட்டியில் தவறி விழுந்து, பெண் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இந்தத் தொட்டியை, சரியாக மூடாமல் மட்டப்பலகையை வைத்து மூடியிருந்ததாகவும், தெரியாமல் அதில் கால் வைத்த பெண், மட்டப்பலகை உடைந்து தவறி விழுந்து இறந்து விட்டதாகவும், செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், அது மழை நீர் வடிகால் தொட்டி அல்ல, வண்டல் தொட்டி என்று புதுவிதமான விளக்கத்தை அளித்திருக்கிறது சென்னை மாநகராட்சி.

மேலும், இறந்த பெண்ணின் வாய் மற்றும் கைகள் கட்டப்பட்டிருந்ததாகவும் கூறுகிறார்கள். அந்தப் புகைப்படங்களைப் பார்த்தால், அவரது துப்பட்டா, கையில் சிக்கியிருப்பது போலத் தான் தெரிகிறதே தவிர, கட்டப்பட்டது போலத் தெரியவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பணிக்குச் சென்ற தூய்மைப் பணியாளர் ஒருவர், தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருந்தார். இப்போது மற்றுமொரு பெண் உயிரிழந்திருக்கிறார். சென்னையில், கடந்த நான்கு ஆண்டுகளாக மழைநீர் வடிகால் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அமைச்சர்களும், சென்னை மேயரும், ஆளுக்கொரு சதவீதம் பணிகள் நிறைவு பெற்று விட்டது என்று நான்கு ஆண்டுகளாகக் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எப்போது பணிகள் நிறைவுபெறும் என்பது யாருக்குமே தெரியாது. ஒவ்வொரு உயிர்ப்பலி ஏற்படும்போதும், ஏதேதோ கதைகள் சொல்லி மடைமாற்றுவதில்தான் குறியாக இருக்கிறதே தவிர, தவற்றை ஒப்புக்கொண்டு, தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாமல் இருக்கிறது திமுக அரசு.

கடும் கோடைக் காலத்துக்குப் பின்னர், பெய்யும் மழைநீரை, பூமி உறிஞ்சிவிடும். ஆனால், நாங்கள் செய்த மழை நீர் வடிகால் பணிகளால்தான் தண்ணீர் தேங்கவில்லை என்று ஸ்டிக்கர் ஒட்ட ஓடிவரும் திமுக அரசு, உங்கள் அரைகுறை பணிகளால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு ஏன் பொறுப்பேற்பதில்லை? இந்த அழகில், சென்னை மழை குறித்து, ஜெர்மனியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார் என்று வெற்று விளம்பரம் வேறு.

உடனடியாக, உயிரிழந்த பெண் குறித்த விவரங்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் எல்லாம், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us