Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஜாமின் கிடைத்தும் கைதி வெளியே வருவது தாமதமானால் மனித உரிமை மீறல்: ஐகோர்ட்

ஜாமின் கிடைத்தும் கைதி வெளியே வருவது தாமதமானால் மனித உரிமை மீறல்: ஐகோர்ட்

ஜாமின் கிடைத்தும் கைதி வெளியே வருவது தாமதமானால் மனித உரிமை மீறல்: ஐகோர்ட்

ஜாமின் கிடைத்தும் கைதி வெளியே வருவது தாமதமானால் மனித உரிமை மீறல்: ஐகோர்ட்

ADDED : மார் 25, 2025 03:45 AM


Google News
Latest Tamil News
சென்னை : 'ஜாமின் வழங்கப்பட்ட பின், சம்பந்தப்பட்ட கைதி, சிறையில் இருந்து வெளியே வருவதில் தேவையற்ற தாமதம் ஏற்பட்டால், அது மனித உரிமை மீறல்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேலுார் சிறையில் உள்ள பெண் கைதிக்கு ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது; நிபந்தனைகளும் விதித்திருந்தது. ஜாமின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், 300 நாட்கள் ஆகியும், அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. இது குறித்து, பத்திரிகையில் செய்தி வெளியானது.

இதையடுத்து, ஜாமின் கிடைத்தும், சிறையில் இருந்து வெளியே வர முடியாத கைதிகள் விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு, தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு, அதே அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை ஆஜராகி, ''ஜாமின் கிடைத்த பின்னரும், சிறையில் உள்ள கைதிகள் குறித்து, சிறை வாரியாக அறிக்கை பெறப்பட்டு, அவர்களை வெளியே கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,'' என்றார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:


சிறையில் உள்ள கைதிகளின் விபரங்களை, மாநில சட்டப்பணிகள் ஆணையத்திடம் அல்லது சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களிடம், சிறைத்துறை அதிகாரிகள் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஜாமின் வழங்கப்படும் பட்சத்தில், அவர் உடனே சிறையில் இருந்து வெளியே வருவதை உறுதி செய்ய வேண்டும்.

வாழ்வுரிமை என்பது அரசியலமைப்பு சட்ட உரிமை என்பதால், ஜாமின் கிடைத்த பின்னரும், ஒருவர் சிறை உள்ளேயே அடைத்து வைக்கப்பட்டால், அது மனித உரிமை மீறல்.

ஜாமின் கிடைத்த கைதிகள், தங்களது குடும்ப சூழல் காரணமாக சிறையில் அடைக்கப்படாமல் இருக்க, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், சிறைத்துறை நிர்வாகமும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us